நகரப் பேருந்தில் பள்ளி சீருடையுடன் பயணம் செய்த வாலிபர்கள்

ஆரணியில் இலவச பயணத்திற்காக நகரப் பேருந்தில் பள்ளி சீருடை அணிந்து வந்த வாலிபர்கள், காவல்துறையிடம் ஒப்படைக்க முயன்றதால் தப்பி ஓட்டம்

Update: 2021-10-06 06:51 GMT

மாதிரி படம் 

தமிழ்நாட்டில் அரசு பேருந்துகளில் இலவசமாக செல்ல பள்ளி மாணவர்களுக்கு பஸ்பாஸ் வழங்கப்படுகிறது. கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மட்டுமே வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் மாணவ- மாணவிகளுக்கு பஸ்பாஸ் வழங்கப்படவில்லை. பள்ளி சீருடை அணிந்துவந்தால் போதும் அவர்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆரணியை சுற்றிலும் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்தப்பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆரணியில் உள்ள உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் படித்து வருகின்றனர். அவர்கள் அரசு நகர பேருந்துகளில் பள்ளிகளுக்கு இலவசமாக சென்று வருகின்றனர்.

மாணவர்களை போலவே வாலிபர்கள் சிலர் பள்ளி சீருடை அணிந்து பேருந்துகளில்  இலவசமாக சென்று வருவதாகவும், அவர்கள் மாணவிகள் மற்றும் பெண் பயணிகளை கிண்டல் செய்து வருவதாகவும் புகார் எழுந்தது.

இந்த நிலையில் ஆரணி - தேவிகாபுரம் செல்லும் டவுன் பேருந்தில் பள்ளி சீருடை அணிந்துவந்த இளைஞர்களிடம், அவர்கள் படிக்கும் பள்ளியின் பெயர், தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் பெயர் குறித்து பேருந்து நடத்துனர் கேட்டுள்ளார். பொதுமக்கள் வண்டியை காவல் நிலையத்திற்கு ஓட்டச் சொன்னார்கள். இதனால் அந்த வாலிபர்கள் ஓடும் பஸ்சில் இருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டனர்.

Tags:    

Similar News