குழந்தை வரம் வேண்டி ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் யாக பூஜை

குழந்தை வரம் வேண்டி ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடந்த யாக பூஜையில் 300 தம்பதியர் பங்கேற்று வழிபட்டனர்.;

Update: 2023-07-04 02:00 GMT

புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற  யாக பூஜை 

குழந்தை வரம் வேண்டி ஆரணி புத்திர காமேட்டீஸ்வரர் கோவிலில் யாக பூஜையில் 300 தம்பதியர் பங்கேற்று வழிபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரம், புதுகாமூா் பகுதியில் அமைந்துள்ள குழந்தை வரம் அருளும் ஸ்ரீபெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரா் கோயிலில் ஆண்டுதோறும் ஆனி மாதப் பௌா்ணமி தினத்தில் குழந்தை வரம் வேண்டி சிறப்பு யாக பூஜை நடைபெறும். இதில் குழந்தை வரம்வேண்டி தம்பதியா்கள் ஏராளமானோா் கலந்து கொள்வாா்கள்.

அதே போல 23-வது ஆண்டாக நேற்று ஆனி மாத பவுர்ணமியையொட்டி அதிகாலையிலேயே சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள், மகா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள 63 நாயன்மார்களின் வருடாபிஷேக விழாவும் நடைபெற்றன.

விழாக்களையொட்டி விநாயகர், லட்சுமி, சரஸ்வதி, நவகிரக ஹோம பூஜைகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. பகல் 2 மணி அளவில் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட தம்பதிகள் கலந்து கொண்ட சிறப்பு யாக பூஜை சங்கல்ப பூஜையுடன் தொடங்கியது.

புனித நீர் நிரப்பப்பட்ட கலசங்கள் வைத்து பூஜை செய்யப்பட்ட கலச நீரினால் சுவாமிக்கும், அம்பாளுக்கும் அபிஷேகம் நடத்தினர். அதனை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவர் சிவபெருமான், அம்பாள் வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சிவபுராணம்பாடியபடி வலம் வந்தனர். பூஜையில் பங்கு பெற்ற தம்பதியர்களுக்கு கலசங்கள், பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு யாக பூஜை விழாவில் முன்னாள் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் எம்.எல்.ஏ., ஆரணி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பூஜை நிறைவு செய்யும் நேரத்தில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையிலும் தம்பதியர்கள் சுவாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர். ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர், சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News