காளசமுத்திரத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை மாவட்டம், காளசமுத்திரம் கிராமத்தில் 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து இன்று பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2021-08-16 13:32 GMT

சாலை மறியலில் ஈடுபட்ட காளசமுத்திரம் கிராம பெண்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலம் அருகே உள்ள காளசமுத்திரம் ஊராட்சியில் 800 பேர் 100 நாள் வேலை திட்டத்தில் பதிவு செய்துள்ளனர். அவர்களில் சில பெண்களுக்கு கடந்த ஒரு மாதங்களாக பணிகள் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதுகுறித்து பலமுறை ஊராட்சி மன்றத்தலைவர், துணைத் தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த தொழிலாளர்கள் சுமார் 50 பேர் இன்று காலை தீடீரென கண்ணமங்கலம் -படவேடு செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதைப்பார்த்தும் ஊராட்சி அலுவலகத்தில் இருந்தவர்கள், அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டனர்.

மறியலில் ஈடுபட்டவர்கள் வேலூரிலிருந்து படவேடு சென்ற பஸ் மற்றும் சுற்றுலா பஸ்சை செல்லவிடாமல் தடுத்தனர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போராட்டம் குறித்து தகவலறிந்த கண்ணமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரசம் செய்தனர்.

அப்போது போளூர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் பேசி வேலை வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். 

இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக கண்ணமங்கலம் படவேடு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News