ஆரணி அருகே கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

ஆரணி அருகே ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி கிராம மக்க திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-03-07 01:30 GMT

நெசல் ஊராட்சியில் ஏரி ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நெசல் ஊராட்சியில் 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட திம்மன்தாங்கல் ஏரி உள்ளது. அந்த ஏரியை பலர் ஆக்கிரமித்துள்ளனர். கிராம மக்களுக்கான சுடுகாடு அப்பகுதியில் உள்ளதால் சுடுகாட்டு பாதை அடைக்கப்பட்டு ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள். இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர் துரை மற்றும் கிராம பொதுமக்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியரிடம் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று மாலை 5 மணியில் இருந்து 7 மணிவரை நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் கட்டைகளை தூக்கி வந்து குறுக்கே போட்டும், சாலையில் அமர்ந்தும் மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என வலியுறுத்தினர்.

ஆரணி டிஎஸ்பி கோட்டீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர் புகழ் மற்றும் போலீசார் வரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது திடீரென ஊராட்சி மன்ற தலைவர் துரை அருகில் இருந்த கனரக வாகனத்தின் சக்கரத்துக்கு அடியில் படுத்துக்கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார், அவரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். சாலை மறியலால் ஆரணி-சேத்துப்பட்டு நெடுஞ்சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்துப்பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News