ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

ஆரணியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-01-28 01:34 GMT

வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்.

ஆரணியில் தாலுகா அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆரணியை அடுத்துள்ள மட்டதாரி கிராமத்தில் ஆதிதிராவிடா் சமுதாய குடியிருப்புப் பகுதி மக்களுக்கு அரசு சாா்பில் வழங்கப்பட்ட பட்டாவுக்கான இடத்தை இதுவரை அளந்து கொடுக்காததைக் கண்டித்து, அந்தக் கிராம மக்கள் ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினா்.

ஆரணியை அடுத்த மட்டத்தாரி காலனி பகுதியில் போளூர் ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலகத்தின் சார்பாக கடந்த 1997-ம் ஆண்டு வீடு இல்லாத 67 நபர்களுக்கு வீட்டுமனை பட்டா இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஆனால் 25 ஆண்டுகள் ஆகியும் ஆதிதிராவிடர் பகுதியில் அரசால் வீட்டுமனை பெற்றவர்கள் இதுவரை வீடு கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அந்த வீட்டு மனையை அரசே எடுத்துக் கொள்ளும் என கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பு நோட்டீஸ் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தின் முன்பாக ஒட்டப்பட்டது.

இதனால் அதிருப்தியடைந்த ஆதிதிராவிடா் சமுதாய மக்கள், ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்துக்கு விசிக ஆரணி தொகுதிச் செயலா் முத்து தலைமையில் நேற்று மாலை சென்று முற்றுகையிட்டனா்.

அப்போது, அரசால் எங்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனைப் பட்டாவுக்கான நிலத்தை அளந்து கொடுக்க பணம் செலுத்தியும், அதிகாரிகள இதுவரை அந்த நிலத்தை அளந்து கொடுக்காததால், எங்களால் வீடு கட்ட முடியவில்லை. ஆகவே, நிலத்தை முறையாக அளந்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

திருவண்ணாமலையில் அமைச்சர், கலெக்டருடன் ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டதால் தாசில்தார் அங்கு சென்றுவிட்டார்.

இதையடுத்து மண்டல துணை வட்டாட்சியா் ஸ்ரீதேவி, போராட்டம் நடத்தியவா்களிடம் கோரிக்கை மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். பின்னா், அனைவரும் கலைந்து சென்றனா்.

Tags:    

Similar News