திருவண்ணாமலை மாவட்டம் ஆரணில் உரக் கடைகளில் யூரியா தட்டுப்பாடு: விவசாயிகள் அவதி
உரத்தட்டுப்பாடு மற்றும் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தல்;
உரக் கடைகளில் யூரியா வந்த தகவலறிந்த விவசாயிகள் உரக்கடை முன்பு குவிந்தனர்
ஆரணி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அங்குள்ள விவசாயிகள் தங்களின் நிலங்களில் நெற்பயிர் சாகுபடி செய்து வருகின்றனர்.
நெற்பயிர் வளர்ச்சி மற்றும் நுண்ணூட்ட சத்துக்காக உரம் தேவைப்படுகிறது. உரக் கடைகளில் யூரியா கிடைக்காமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.இந்தநிலையில் ஆரணி மண்டி வீதியில் உள்ள ஒரு உரக்கடைக்கு யூரியா மூட்டைகள் லாரியில் வந்ததாக தகவல் பரவியது.
இதையறிந்ததும், விவசாயிகள் பலர் சம்பந்தப்பட்ட உரக்கடை முன்பு குவிந்தனர். அந்த உரக்கடைக்காரர் 250 ரூபாய்க்கு விற்க வேண்டிய யூரியா மூட்டையை 500 ரூபாய்க்கு விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. அதுவும் ஆதார் அட்டையை கொண்டு வரும் விவசாயிக்கு தலா ஒரு மூட்டை வீதம் யூரியா விற்பனை செய்யப்படுவதாக தெரிகிறது. மற்ற உரக்கடைகளில் யூரியா தட்டுப்பாடு நிலவி வருகிறது. உரத்தட்டுப்பாடு மற்றும் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்யப்படுவதை வேளாண் அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் தெரிவித்தனர்.