யூடியூப் சேனல் படப்பிடிற்கு வந்த இருவர் கமண்டல நதியில் மூழ்கி உயிரிழப்பு

கண்ணமங்கலம் அடுத்த படவேடு கமண்டல நதியில் மூழ்கி 2 வாலிபர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது;

Update: 2023-02-27 06:54 GMT

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அடுத்த படவேடு கமண்டல நதியில் மூழ்கி 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

‘யூடியூப் சேனல்

சென்னை கீழ்கட்டளை பகுதியை சேர்ந்தவர் பிரகலாதன் (35), நங்கநல்லூரை சேர்ந்தவர் ஸ்ரீவர்ஷன் (38). இவர்களுடன் 8 பேர் கொண்ட குழுவினர் யூடியூப் சேனல் படப்பிடிப்பிற்காக பல்வேறு பகுதிகளில் உள்ள கோயில்களுக்கு சென்று வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று மதியம் படவேடு பகுதியில் உள்ள ராமர் கோவிலை யூடியூப் சேனலுக்காக வீடியோ எடுக்க வந்து தங்கியிருந்தனர். பின்னர் பிரகலாதன் என்பவர், தான் சாப்பிட்ட தட்டை கழுவுவதற்காக கமண்டல நதிக்கு சென்றார். அவருடன் நங்கநல்லூரை சேர்ந்த ஸ்ரீவர்ஷனும் சென்றார். அப்போது பிரகலாதன் கால் தவறி தண்ணீரில் விழுந்து விட்டார். இதனை பார்த்த ஸ்ரீவர்ஷன் அவரை காப்பாற்ற முயன்றபோது அவரும் தண்ணீரில் மூழ்கினார்.

நீரில் மூழ்கி பலி

இருவருக்கும் நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கிவிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் போளூர் தீயணைப்பு நிலையத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மற்றும் கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

நீண்ட போராட்டத்திற்கு பிறகு பிரகலாதன், ஸ்ரீவர்ஷன் ஆகிய இருவரது சடலங்களையும் தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், சடலங்களை உடற்கூறு ஆய்விற்காக  வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மக்கள் கோரிக்கை

சம்பவம் நடந்த இடத்தில் இதுவரை 8 பேர் ஏற்கனவே இறந்துள்ளனர் எனவும், பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த வலை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் இதுபோன்ற துயர சம்பவங்கள் தொடர்ந்து  நிகழ்ந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும், அந்த இடத்தில் உடனடியாக எச்சரிக்கை பலகை மற்றும் பாதுகாப்பு வலை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News