சேத்துப்பட்டு அருகே பூட்டை உடைத்து ஆசிரியர் வீட்டில் நகை திருட்டு

சேத்துப்பட்டில் ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து 18 பவுன் நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2022-09-19 10:33 GMT

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் திரிபுரசுந்தரி . இவர் சேத்துப்பட்டு வட்டார வள மையத்தில் ஆசிரியர் பயிற்றுனராக வேலை செய்து வருகிறார்.

இவரது கணவர் மணிமாறன் அரும்பலூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திண்டிவனத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு திரிபுரசுந்தரி சென்றார்.

பின்னர் இன்று காலை வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 18 பவுன் நகைகள், பட்டு சேலைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது.

இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் சம்பவம் நடந்த இடத்துக்கு சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News