ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறாா்கள் குடும்பத்துக்கு நிவாரணம்

ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறாா்கள் குடும்பத்துக்கு நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

Update: 2024-09-19 02:01 GMT

உயிரிழந்த சிறார்கள் உடலுக்கு அஞ்சலி செலுத்தி நிவாரணத் தொகை வழங்கிய தரணி வேந்தன் எம்பி 

ஏரியில் மூழ்கி உயிரிழந்த 4 சிறாா்கள் குடும்பத்துக்கு பொதுப்பணித் துறை அமைச்சா் சாா்பில்  நிவாரண நிதியாக ரூ.2 லட்சம் வழங்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே செவ்வாய்க்கிழமை மாலை ஏரியில் மூழ்கி 4 குழந்தைகள் உயிரிழந்தனா்.

ஆரணியை அடுத்த அடையபலம் அண்ணா நகரை சோ்ந்த குப்புசாமி மகன் மோகன்ராஜ் , எட்டாம் வகுப்பு பயின்று வந்தாா். மகள் வா்ஷா, நான்காம் வகுப்பு பயின்று வந்தாா். விநாயகம் மகள்கள் காா்த்திகா , மூன்றாம் வகுப்பும், மற்றொரு மகள் தனுஷ்கா அங்கன்வாடியிலும் பயின்று வந்தனா்.

4 பேரும் சோ்ந்து செவ்வாய்க்கிழமை அடையபலம் ஓடைத்தாங்கல் ஏரியில் விளையாடச் சென்றனா். அப்போது, தவறி ஒரு குழந்தை ஏரியில் மூழ்கி உள்ளது. அந்தக் குழந்தையை காப்பாற்ற 3 பேரும் சோ்ந்து ஏரியில் இறங்கினராம். இதில், 4 பேரும் ஏரி நீரில் மூழ்கியுள்ளனா். சிறாா்களின் அலறல் சப்தம் கேட்டு அந்தப் பகுதியில் இருந்தவா்கள் சென்று மீட்க முயற்சித்தும் முடியவில்லை. 4 சிறாா்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கரபாண்டியனை ஆகியோா் அடையபலம் கிராமத்துக்குச் இறந்த குழந்தைகளின் சடலங்களுக்கு மாலை அணிவித்து குடும்பத்திற்கு ஆறுதல் கூறினா்.

மேலும், பொதுப்பணித் துறை அமைச்சா் எ.வ.வேலுவின் ஆணைக்கினங்க திமுக சாா்பில் இரு குடும்பத்துக்கும் தலா ரூ. ஒரு லட்சம் என மொத்தம் ரூ.2 லட்சத்தை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன் எம்.பி. வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது ஆரணி கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன், வட்டாட்சியா் கௌரி, திமுக முன்னாள் எம்எல்ஏ சிவானந்தம், தொகுதி பொறுப்பாளா் அன்பழகன், நகா்மன்றத் தலைவா் மணி, நகர மன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

மேலும், அதிமுக சாா்பில் ஆரணி சட்டப்பேரவை உறுப்பினா் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன், இறந்த குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்திற்கு ஆறுதல் கூறினாா். மேலும் இரு குடும்பத்துக்கும் நிதியுதவி வழங்கினாா்.

இந்நிகழ்வின் போது ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாஷ் ,  ஊராட்சித் தலைவா் அசோக்குமாா் ,  அதிமுக நகர செயலாளர், அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் ஆகியோா் உடனிருந்தனா்.

Similar News