பள்ளிக்கு புதிய வகுப்பறை கட்டிடம் கட்ட கோரி ஊராட்சி மன்ற தலைவர் மனு

தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்ட வேண்டும் என்று வருவாய் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

Update: 2022-10-07 01:35 GMT

ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்த கிராம மக்கள்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த சங்கீதவாடி கிராமத்தில்  அரசினர் உயர்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் போதுமான  அடிப்படை வசதிகளுடன் அடுக்குமாடி கட்டிடம் கட்டவேண்டும் என கிராம மக்கள், ஊராட்சி மன்ற தலைவர், அரசிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.

இந்த நிலையில் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் சங்கீதவாடி கிராம ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் சுப்பிரமணி மற்றும் கிராம மக்கள் மனு அளிக்க வந்தனர்.  அங்கு  வருவாய் கோட்டாட்சியர்  இல்லாததால்  நேர்முக  உதவியாளர் க.பெருமாளிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

அந்த மனுவில் சங்கீதவாடியில் 2017-18-ம் கல்வி ஆண்டில் அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட பள்ளியில் ஏற்கனவே இருந்த 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளது. தற்பொழுது 250-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். போதுமான கட்டிட வசதிகள் இல்லாததால் மாணவ மாணவிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதனால் அவர்களது எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.

பள்ளிக்கு இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது தற்பொழுது நிலை உயர்த்தப்பட்ட பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் , கழிப்பிட வசதி , ஆய்வகம் , விளையாட்டு மைதானம் , நூலகம் , சுற்றுச்சுவர் , உள்ளிட்ட அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும் என மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

இரண்டரை ஏக்கர் பரப்பளவு கொண்ட இடம் பள்ளியின் அருகே அரசுக்கு சொந்தமான இடமாக உள்ளது . அங்கு ஆக்கிரமிப்பு உள்ளது . ஆக்கிரமிப்புகளை அகற்றியும் இரண்டரை ஏக்கர் இடத்தினை பள்ளி கல்வித்துறைக்கு வழங்கிட வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் இரண்டு கோடி மதிப்பில் புதிய பள்ளி கட்டிடம் கட்ட ஆயுத்தமாக உள்ளது என்றும் எனவே இத்திட்டத்தினை ஒதுக்கீடு செய்து தர கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முறைப்படி முதன்மை கல்வி அலுவலர் , தேவைகள் குறித்து கடிதம் மாவட்ட ஆட்சியரிடம் வழங்க வேண்டும்

அதற்கான கோப்புகள் முறைப்படி தாசில்தாருக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு பணிகள் நடைபெறும் உங்கள் கோரிக்கை மனுவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மூலமாக அனுப்பி வைக்கவும் என பதில் அளித்து கோரிக்கை மனுவை பெற்றுக் கொண்டார்.

Tags:    

Similar News