ஆரணி அருகே போலீஸ் என கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த நபர் கைது

ஆரணி அருகே போலீஸ் என கூறி ரூ.5 ஆயிரம் பணம் பறித்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-08-07 07:07 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த என்.கே.தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வில்வநாதன் (வயது 25), பொக்லைன் டிரைவர். இவர் தனது நண்பர்களுடன் 5-ந் தேதி மாலை வெட்டியாந்தொழுவம் காட்டுப்பகுதியில் மது அருந்தி கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது ஒருவர் மோட்டார் சைக்கிளில் வந்து வில்வநாதன் மற்றும் அவருடன் இருந்த நண்பர்களை பார்த்து ஏன் இந்த பக்கம் வந்தீர்கள் என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் நான் யார் தெரியுமா?, நான் போலீஸ் எனக்கூறி வில்வநாதனிடம் இருந்து ரூ.5 ஆயிரத்தை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்.

இதனை வில்வநாதனின் நண்பன் செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் வில்வநாதன் வீடியோ காட்சிகளுடன் புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், போலீஸ் என மிரட்டல் விடுத்தவர் பையூர் பகுதியை சேர்ந்த பெருமாள், கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து இன்று அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News