மேற்கு ஆரணியில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.;
ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கண்ணமங்கலத்தை அடுத்த காட்டுக்காநல்லூர் கிராமத்தில், 100 நாள் வேலைதிட்டத்தில் உரிய நேரத்தில் வேலை வழங்கப்படுவதில்லை எனவும், அவர்களுக்கு 3 கிலோமீட்டர் தொலைவிற்கு பணிகள் வழங்கப்படுவதாகவும், 100 நாள் வேலை வழங்காமல் நான்கு வாரத்திற்கு ஒருமுறை என காலம் தாழ்த்தி வழங்கப்படுவதாகவும் இதனை கண்டித்து பணியாளர்கள் அனைவரும் ஆரணி கோட்டை மைதானம் அருகே உள்ள மேற்கு ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது 100 நாள் வேலைதிட்ட அடையாள அட்டைகளை கீழே வீசி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதை அறிந்த வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன், அனைவரையும் அழைத்து பேசி ஊராட்சி தலைவர், ஊராட்சி செயலாளரை அழைத்து உரிய நேரத்தில், குறிப்பிட்ட இடத்திலேயே வேலை வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.