ஆரணியில் பயிற்சியின்போது மயங்கி விழுந்த கபடி வீரர் உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் பயிற்சியின் போது மயங்கி விழுந்த கபடி வீரர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.;
பரிதாபமாக உயிரிழந்த கபடி வீரர் வினோத்குமார்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி களத்துமேட்டு தெருவை சேர்ந்தவர் வினோத்குமார்(34). கபடி வீரரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி களத்துமேட்டு தெருவில் உள்ள மாரியம்மன் கோவிலில் கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதனையொட்டி, கபடி போட்டி நடைபெற இருந்த நிலையில், இதற்காக களத்துமேட்டு தெருவை சேர்ந்த வினோத்குமார் உள்ளிட்ட கபடி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வினோத்குமார் கோவில் முன்பு கரணம் அடித்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.
மயங்கி கீழே விழுந்த வினோத்குமாரை, உடனடியாக சக கபடி வீரர்கள் மீட்டு ஆரணி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரணி மற்றும் வேலூர் மருத்துவமனையில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்பதால், மேல்சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக சென்னை வந்த கபடி வீரர் வினோத்குமார் சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்தார்.