குழந்தைகளை பணியில் அமர்த்தினால் சிறை: தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை

குழந்தை தொழிலாளர்களை பணியில் அமர்த்தினால் சம்பந்தப்பட்டவர்களுக்கு சிறைத்தண்டனை விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொழிலாளர் அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update: 2023-01-13 00:49 GMT

பைல் படம்.

திருவண்ணாமலை, ஆரணி மற்றும் செய்யாறு பகுதிகளில் உள்ள அய்யம்பாளையம் புதூர், மல்லவாடி, பெங்களத்தூர், பராசூர், மோத்தக்கல் ஆகிய இடங்களில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனரா என கூட்டாய்வு நடந்தது. பள்ளி கல்வித் துறை அலுவலர்கள், தொழிலாளர் துறை அலவலர்கள், உள்ளாட்சி துறை அலுவலர்கள், சைல்டுலைன் அமைப்பை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் போலீசார் கலந்து கொண்டு ஆய்வுசெய்தனர்.

இதில் பள்ளி இடைநின்ற மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு அறிவுரை வழங்கப்பட்டு மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

இது குறித்து திருவண்ணாமலை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சீ.மீனாட்சி கூறுகையில், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளர் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்துவது சட்டப்படி குற்றம் ஆகும். சட்டத்தை மீறும் நிறுவனங்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.

குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளரை பணிக்கு அமர்த்தும் நபர்களுக்கு நீதிமன்றத்தால் ரூ.20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 வருடங்கள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்ந்தோ தண்டனை வழங்கப்படும்.

எனவே திருவண்ணாமலை மாவட்டத்தை குழந்தை தொழிலாளர்களே இல்லாத மாவட்டமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

Tags:    

Similar News