இரும்பேடு வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேகம்: கவர்னர்கள், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு

ஆரணியில் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோயில் கும்பாபிஷேக விழாவில் இரண்டு மாநில ஆளுநர்கள், நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளனர்.

Update: 2022-05-28 03:35 GMT

கோவில் திருப்பணி வேலைகளை ஏ.சி. சண்முகம் மற்றும் ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் பார்வையிட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த ஏ.சி.எஸ் நகரில் புதிய நீதி கட்சி நிறுவனர் ஏ.சி .சண்முகம் கல்வி நிறுவனங்கள் செயல்படுகிறது. இந்த இடத்தில் 95 அடி. ராஜ கோபுரத்துடன் ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவில் புதியதாக கட்டப்பட்டு வருகிறது.  இக்கோவில் பணி கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.  தற்போது பணிகள் முடிவடைந்து ஜூன் 17ஆம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து புதிய நீதி கட்சி தலைவரும், டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தருமான ஏ,சி. சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஏ.சி. எஸ் குழுமம் சார்பில் ஸ்ரீ வெங்கடாஜலபதி திருக்கோவில் ஜூன் மாதம் 17ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் ஜீயர்கள் யாக சாலையை துவக்கி வைக்கின்றனர். திருப்பதியில் இருந்து பூஜை பொருட்கள் வரவழைக்கப்பட்டு யாக சாலைகள் நடைபெற உள்ளது.

இவ்விழாவில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன், மணிப்பூர் ஆளுநர் இல. கணேசன், முன்னாள் முதல்வர்கள்                  ஓ. பன்னீர்செல்வம், எடப்பாடி கே.  பழனிச்சாமி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, மத்திய அமைச்சர்கள் முருகன், தமிழக அமைச்சர்கள் வேலு, சேகர்பாபு, கர்நாடக அமைச்சர் சேமன்னா, ஆந்திரா அமைச்சர் ரோஜா செல்வமணி, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன், தேசிய பொதுச்செயலாளர் சந்தோஷ ஜி, ஆரணி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் ராமச்சந்திரன், போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி,  நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜெகத்ரட்சகன், விஷ்ணுபிரசாத் , அண்ணாதுரை,  ஜீயர்கள் மடாதிபதிகள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்.

கும்பாபிஷேகம் முன்னிட்டு ஜூன் 15ஆம் தேதி யாக சாலை பூஜை துவக்கப்பட உள்ளது,  மேலும் மாலை நேரங்களில் பரதநாட்டியம் தேசமங்கையர்கரசியின்    "குறை ஒன்றும் இல்லை கோவிந்தா"  ஆன்மீக சொற்பொழிவு, லட்சுமன்ஸ்ருதி இன்னிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. இவ்விழாவில் மேலும் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர் என ஏ,சி சண்முகம் தெரிவித்தார்.

இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வாரா என்று நிருபர்கள்  கேட்டதற்கு அன்று மாலை நடைபெறும் திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சியில் பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்தார்.

Tags:    

Similar News