ஆரணி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி

ஆரணி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.

Update: 2024-04-11 09:00 GMT

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியினை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, 

ஆரணி மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் மற்றும் வேட்பாளா்களின் புகைப்படங்கள் பொருத்தும் பணிகளை தோ்தல் நடத்தும் அலுவலா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் அட்டவணையின்படி 2024 ஆம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தல் திருவண்ணாமலை மாவட்டத்தில் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது.

இது தொடர்பாக திருவண்ணாமலை மற்றும் ஆரணி ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் முதல் ரேண்டமைசேசன் பணி மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் எட்டு சட்டமன்ற தொகுதிகளுக்கும் உரிய பாதுகாப்புடன் இயந்திரங்கள் அனுப்பப்பட்டது

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்ட அரங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தலுக்கு முந்திய நாளன்று வாக்குப்பதிவு மையங்களுக்கு அனுப்பி விட ஏதுவாக இரண்டாவது ரேண்டமைசேசன் நடைபெற்றது.

அப்போது ஒவ்வொரு வாக்கு சாவடிக்கும் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மென் பொருள் மூலமாக ஆரணி பாராளுமன்ற தொகுதிக்கு 1780 திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதிக்கு 1722 ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மேற்படி இரு பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பொது மேற்பார்வையாளர்கள் முன்னிலையில் இப்பணிகள் நடைபெற்றது.

மேலும் அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்குரிய மின்னணு வாக்கு இயந்திரத்தில் பொருத்துவதற்குரிய வாக்குச்சீட்டுகளை மாவட்ட கருவூலத்திலிருந்து உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டது.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்குச்சீட்டு பொருத்துதல் மற்றும் சின்னம் பதிவேற்றல் ஆகிய பணிகளை அந்தந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் மற்றும் பெல் நிறுவன அலுவலர்கள் பொறியாளர்கள் உதவியுடன் இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

மேற்கண்ட நிகழ்வில் வட்டாட்சியர் மஞ்சுளா ,  அனைத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News