கோவிலில் குழந்தையை விட்டு சென்றவர்கள் குறித்து போலீஸ் விசாரணை
ஆரணியில் உள்ள கோயிலில் 5 மாத ஆண் குழந்தையை விட்டு சென்றுள்ளனர். அவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஆரணிபாளையம் காந்தி ரோட்டில் உள்ள சின்ன மாரியம்மன் கோவிலில் இன்று நவக்கிரக சன்னதி உள்ளே சுமார் 5 மாத ஆண் குழந்தையை புத்தம் புதிய உடைகள் அணிவித்து விட்டுச் சென்றுள்ளனர். நவகிரக சன்னிதியில் சாமி தரிசனம்செய்யவந்த முதாட்டி ஒருவர் குழந்தையை பார்த்து அக்கம்பக்கம் உள்ளார்களிடம் விசாரித்தார். நீண்டநேரம் ஆகியும் குழந்தையை யாரும் தூக்க வராததால் கோவிலுக்கு வந்திருந்த பொதுமக்கள் ஆரணி டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ரகு, ஆரணி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷாகின், முத்துலட்சுமி ஆகியோர் கோவிலுக்குச் சென்று அங்கு கிடந்த ஆண் குழந்தையை மீட்டு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர். குழந்தை நன்றாக ஆரோக்கியமாக இருந்தது. இதையடுத்து மாவட்ட குழந்தைகள் காப்பகத்திற்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் மாவட்ட குழந்தைகள் காப்பகத்தில் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.