ஆரணி அருகே இருசக்கர வாகனம் மீது அரசு பஸ் மோதல்: வாலிபர் உயிரிழப்பு
ஆரணி அருகே மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.;
பரிதாபமாக உயிரிழந்த தமிழரசன்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த அரையாளம் காலனி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். அவரது மகன் தமிழரசன் (வயது 21). இவர், மோட்டார் சைக்கிளில் தேவிகாபுரம் சாலையில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அரசு டவுன் பஸ் திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயம் அடைந்த தமிழரசனை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ், சப்-இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.