இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் சார்பில் நடைபெற்ற உணவுத் திருவிழா

கண்ணமங்கலம் பகுதியில் இயற்கை விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் சார்பில் "ஊர்தோறும் உணவுத் திருவிழா" நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2022-05-04 07:48 GMT

இயற்கை விவசாயிகள் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் ஊர்தோறும் உணவுத்திருவிழா  நடைபெற்றது.

திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் பகுதியில் இயற்கை விவசாயிகள் இயற்கை ஆர்வலர்கள் சார்பில் "ஊர்தோறும் உணவுத்திருவிழா" என்ற நிகழ்ச்சி  அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இயற்கை விவசாயி நம்மாழ்வார், நெல் ஜெயராமன் ஆகியோர் படத்திற்கு மலர்தூவி குத்துவிளக்கேற்றி வைத்து, உணவு திருவிழாவை கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவர் மகாலட்சுமி தொடங்கி வைத்தார்.

கண்காட்சியில் மூலிகைச் செடி வகைகள், விதை நெல் ரகங்கள், சிறுதானிய உணவு வகைகள், பஞ்சகவ்வியம், பீட்ரூட், கேரட் பவுடர் பாக்கெட், பாரம்பரிய அரிசி வகைகள் ,வள்ளலார் கண்ட ஞானமூலிகைகள், சாமை, வரகு, திணை உணவு பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தனர். இயற்கை விவசாயத்தில் விளைந்த உணவு வகைகள் சமைத்து பரிமாறப்பட்டது. சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் பார்வையாளர்களை கவர்ந்தது.  ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வத்துடன் கண்காட்சியையும் இயற்கை உணவு பொருட்களையும் கண்டும் வாங்கியும் சென்றனர்.

இந்நிகழ்ச்சியில் தொண்டைமண்டல இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பாலு, கண்ணமங்கலம் ஊர்தோறும் உணவுத்திருவிழா தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரரசன், பள்ளித் தலைமை ஆசிரியர் கருணாநிதி, ரோட்டரி சங்க தலைவர் அருளரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News