தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைப்பு

தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முறைகேடு நடந்ததால் கலைக்கப்பட்டு சங்க செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்

Update: 2021-11-26 06:30 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தாலுகா தேவிகாபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதன் தலைவராக மணிகண்டன், துணைத் தலைவராக புருஷோத்தமன், இயக்குனர்களாக பன்னீர்செல்வம், கணேசன், சங்கர், இளவரசி, தனலட்சுமி, மல்லிகா, மங்களம், குமார், சண்முகம் ஆகியோர் உள்ளனர்.

கூட்டுறவு கடன் சங்க செயலாளராக குப்பன் (பொறுப்பு) பணியாற்றி வந்தார். அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, தற்போது பழனி என்பவர் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.

தேவிகாபுரம், முருகமங்கலம், கரிப்பூர், மலையாம்புரடை, நாச்சாபுரம் பகுதியில் உள்ள விவசாயிகள் விவசாய கடன், மகளிர் குழு கடன், நகைக்கடன், உரம் உள்ளிட்ட அரசு மானியங்கள் பெற்று இப்பகுதி விவசாயிகள் மற்றும் மகளிர் அணியினர் பயன்பெற்று வந்தனர்.

இந்த கடன் சங்கத்தில் கடந்த 2019-2020-ம் ஆண்டு கணக்குகள் தணிக்கை நடைபெற்றது. அப்போது பல்வேறு வகையில் ரூ.17 லட்சத்து 74 ஆயிரத்து 640 முறைகேடு நடந்து உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் கடன் பெற்றவர்களின் நலனுக்கு பாதகமாக செயல்பட்டு சங்கத்தில் முறைகேடு நடைபெற காரணமாக இருந்த செயலாளர் குப்பன் (பொறுப்பு) மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள செப்டம்பர் மாதம் சங்க நிர்வாகிகளுக்கு இணைப்பதிவாளர் உத்தரவிட்டார்.

இணைப்பதிவாளர் உத்தரவை நிறைவேற்ற நிர்வாக குழு தவறியதால், சங்கத்தின் நலன் கருதியும், பொதுநலன் கருதியும் தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்களின் சட்டப்பிரிவுபடி நிர்வாகக் குழுவை ஏன் கலைக்கக் கூடாது என்பதற்கான எழுத்துப்பூர்வமான விளக்கத்தினை 15 தினங்களுக்குள் அளிக்கக்கோரி நிர்வாக குழுவினருக்கு கடிதம் அனுப்பப்பட்டது.

கடிதம் கிடைத்தும்,  கூட்டுறவு கடன் சங்க செயலாளர் குப்பன் (பொறுப்பு) மீது நிர்வாகக்குழு நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தியது. இதனால் மீண்டும் ஒரு கடிதத்தை இணைப் பதிவாளர் அனுப்பினார்.

இதனைத் தொடர்ந்து செயலாளர் குப்பனை பணியிடை நீக்கம் செய்ய முடிவெடுத்து அதனை இணைப்பதிவாளரிடம் வழங்கியது. இதில் திருப்தி அடையாத இணைப்பதிவாளர் மீண்டும் தலைவர் மற்றும் நிர்வாக குழு இயக்குனர்களை நேரடியாக வந்து விளக்கம் அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அதன்படி கடந்த 12-ந் தேதி தலைவர் மற்றும் இயக்குனர்கள் நேரடியாக இணை பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் அளித்தனர். இவர்கள் அளித்த விளக்கத்தில் திருப்தி இல்லாத காரணத்தால் 18-ந் தேதி தேவிகாபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வாக குழு கலைக்கப்படுவதாக இணைபபதிவாளர் ராஜ்குமார் உத்தரவிட்டுள்ளார்.

இக்கடிதம் இன்று சங்க தலைவர் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் முறையாக வழங்கப்பட்டது. அப்போதுதான் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் கலைக்கப்பட்டது நிர்வாக குழுவினருக்கும், பொதுமக்களுக்கும் தெரியவந்தது. 

Tags:    

Similar News