ஆரணி சில்க் சிட்டி: சிறப்புப் பார்வை

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆரணி சில்க் சிட்டி பற்றிய ஒரு சிறப்புப் பார்வை

Update: 2022-01-28 07:06 GMT

ஆரணி பட்டு நெசவு 

ஆரணி நகராட்சி திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆரணி வட்டத்தில் மற்றும் ஆரணி வருவாய் கோட்டத்தில் அமைந்துள்ளது. 33 நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் கூடிய தேர்வு நிலை நகராட்சியும் உள்ளது

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 3 வருவாய் கோட்டங்களில் இரண்டாவது வருவாய் கோட்டமான வருவாய் கோட்டம் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் ஆகியவை இங்கு அமைந்துள்ளது. தற்போது புதிய பல்கலைக்கழகப் பொறியியற் கல்லூரி இங்கு அமைந்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 12 முக்கிய நகரங்களில் ஆரணி இரண்டாவது பெரிய நகரமாகும். இங்கு காஞ்சிபுரத்திற்கு அடுத்தப்படியாக பட்டுப்புடவைகள் மற்றும் பொன்னி ரக அரிசி வகைகளுக்கும் பெயர் பெற்றது இந்த ஆரணி நகரம். ஆரணி பட்டுப்புடவைகளுக்கு பெயர் பெற்றிருப்பதனால் ஆரணியை பட்டு நகரம் (ஆரணி சில்க் சிட்டி) எனவும் அழைப்பர். அது மட்டுமல்லாமல் திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிக வருவாய் ஈட்டித்தரும் நகரமாக ஆரணி நகரம் உள்ளது. தமிழ்நாட்டில் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களின் பட்டியலில் ஆரணி 76 வது பெரிய நகரமாக அமைந்துள்ளது.  ஆரணி பட்டு சேலை யானது புவிசார் குறியீடு பெற்று தேசிய விருதும் பெற்றுள்ளது.

ஆரணி 1921 ஆம் ஆண்டு மூன்றாம் நிலை நகராட்சியாக உருவாக்கப்பட்டது.  1951 ஆம் ஆண்டு இரண்டாம் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 1987 ஆம் ஆண்டு முதல் நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டது.

2008 ஆம் ஆண்டு முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு இன்று வரை செயல்பட்டு வருகிறது. ஆரணி,தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறந்த தேர்வு முதல் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன.

தற்போதைய நகராட்சி ஆணையாளராக  பெ .தமிழ்செல்வி பொறுப்பேற்றுள்ளார்

ஆரணியின் புறநகர் பகுதிகளான  விஜய நகரம், இரும்பேடு, பையூர், வடுகசாத்து, விளை சித்தேரி, தச்சூர், ராட்டிணமங்கலம், அண்ணா நகர், முள்ளிப்பட்டு, ஹவுசிங் ஃபோர்டு, சேவூர், அக்ரா பாளையம், மெய்யூர், அடையபுலம், வேலப்பாடி, ஆகிய பகுதிகள் அமைந்துள்ளது. இந்த பகுதிகள் ஆரணி நகரை சார்ந்து அமைந்துள்ளது. இந்த பகுதிகளை ஆரணி நகராட்சி எல்லைக்குள் வரும்படி சேர்க்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கை. அப்படி இந்த பகுதிகளை ஆரணி நகராட்சியுடன் சேர்த்தால் ஆரணியானது பெருநகராட்சியாகவோ அல்லது மாநகராட்சியாகவோ வழி வகுக்கும். திருவண்ணாமலை மாவட்டத்தை இரண்டாக பிரித்து ஆரணியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டம் உருவாக்க வேண்டும் என்று ஆரணி மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது

நடைபெறவுள்ள நகர்புற உள்ளாட்சித்தேர்தலில் இந்த நகராட்சி  பொதுப்பிரிவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது

மொத்த வார்டுகள் 33

எஸ்சி வார்டுகள் 11, 23

எஸ்சி பெண்கள் வார்டுகள் 21, 24

பெண்கள் பொதுப்பிரிவு வார்டுகள்  5, 6, 8, 9, 10, 12, 17, 18, 19, 20, 22, 28, 29, 31, 32

Tags:    

Similar News