ஆரணி அருகே மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி- வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணி அருகே அசைவ ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறிய பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Update: 2022-07-03 07:48 GMT

அசைவ ஓட்டலில் வாடிக்கையாளருக்கு பரிமாறிய பிரியாணியில் கரப்பான் பூச்சி கிடந்தது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த நேத்தப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 40). இவர் தனது மனைவி ஜான்சிராணியுடன் ஆரணி பழைய பஸ் நிலையம் மணிகூண்டு அருகே உள்ள ஒரு அசைவ ஓட்டலில் நேற்று மட்டன் பிரியாணி மற்றும் மீன் வருவல், சிக்கன் 65 ஆகிய உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.

அப்போது பிரியாணியில் வறுத்த நிலையில் கரப்பான் பூச்சி இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் சப்ளையரிடம் கேட்டதற்கு மழுப்பலாக பதில் அளித்தனர். இதனால் கணவன்-மனைவி இருவரும் அங்கிருந்த காசாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருப்பதையும், தான் சாப்பிட்டதற்காக அளிக்கப்பட்ட பில்லையும் அந்த நபர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பினார். இத்தகவல் காட்டுத்தீ போல பரவியது.

இதுசம்பந்தமாக இந்து முன்னணியின் மாவட்ட நிர்வாகி தாமு ஆரணி நகராட்சி அலுவலக மேலாளர் நெடுமாறனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

அந்த புகாரில், ஆரணி நகரில் ஒரு ஓட்டலில் அசைவ உணவு சாப்பிட்டு ஒரு சிறுமி பலியானதாகவும், அதனைத் தொடர்ந்து சமீபத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுதி முடித்த மாணவன் மற்றொரு அசைவ ஓட்டலில் தந்தூரி வகை உணவு சாப்பிட்டு உடல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பலியானார்.

இந்த நிலையில் தற்போது பிரியாணியில் வறுத்த நிலையில் கரப்பான் பூச்சி கிடந்துள்ளது. எனவே, உடனடியாக அந்த 3 அசைவ ஓட்டல்களை மூடி சீல் வைக்க வேண்டும், அந்த கடைகள் திறந்தால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மேலும் உடனடியாக உணவு பாதுகாப்பு துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News