திருவண்ணாமலை அருகே கார்-பஸ் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு

களம்பூர் அருேக கார்-பஸ் மோதலில் சித்தூர் பகுதியை சேர்ந்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Update: 2023-06-04 03:25 GMT

பேருந்தில் மோதிய கார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் பகுதியை சேர்ந்த முரளிகிருஷ்ணா என்பவரது மனைவி ராணிசரோஜா மற்றும் கிரிதர் மனைவி லட்சுமி ஆகியோர் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்வதற்காக அங்கிருந்து காரில் புறப்பட்டனர். சித்தூர் பகுதியை சேர்ந்த பாபு என்கிற பத்மநாபன் என்பவர் காரை ஓட்டினார்.

இவர்கள் வேலூர் வழியாக எட்டிவாடி கூட்ரோடு சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

அப்போது திருவண்ணாமலை இருந்து வேலூர் நோக்கி சென்ற அரசு பேருந்தும் காரும் மோதிக்கொண்டன.

இந்த விபத்தில் கார் டிரைவர் பாபு ,லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இந்த விபத்தில் ராணி சரோஜா படுகாயம் அடைந்தார். உடனே அந்த பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, களம்பூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சத்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பலியானவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் திருவண்ணாமலை-வேலூர் நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News