அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் திடீர் ஆய்வு
ஆரணி பகுதியில் அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.;
அரசு, தனியார் பஸ்களில் அதிகாரிகள் திடீரென ஆய்வு செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியில் தனியார், அரசு பஸ்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆபத்தான முறையில் படிக்கட்டுகளிலும், பஸ்சின் பின்பக்கம் உள்ள ஏணியிலும் தொங்கியவாறு பயணம் செய்வதாக, திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் பா. முருகேசுக்கு புகார்கள் வந்தது.
கலெக்டர் உத்தரவுபடி ஆரணி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சரவணன், ஆரணி மோட்டார் வாகன ஆய்வாளர் முருகேசன், செய்யாறு மோட்டார் வாகன ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ஆரணி - ஆற்காடு நெடுஞ்சாலையில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர்.
அப்போது அரசு, தனியார் பஸ்களில் மாணவர்கள் படியில் தொங்கியபடி பயணம் செய்தது தெரிய வந்தது. அந்த 2 தனியார் பஸ்களுக்கும் சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அந்தத் தனியார் பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் உரிமங்களை கைப்பற்றி, அதை தற்காலிகமாக தடை செய்ய பரிந்துரை செய்யப்பட்டது. மேலும் அரசு பஸ்களில் ஓட்டுனர், நடத்துனர்களுக்கும், படியில் பயணம் செய்த மாணவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இனிவரும் காலங்களில் இது போல நடந்து கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது.