அதிகாரிகள் வராததால் ஆத்திரம்: பொதுமக்கள் தரையில் அமர்ந்து தர்ணா

சமாதான கூட்டத்துக்கு அழைத்துவிட்டு அதிகாரிகள் வராததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-03-31 01:02 GMT

பொதுமக்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகராட்சி அருகில் உள்ள பெரியார் நகர், மணியம்மை தெரு, கல்லறை தெரு ஆகிய பகுதிகளை சுற்றிலும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதன் அருகில் ஆரணி காந்தி நகர் பகுதி பொதுமக்களுக்கு மயான பகுதி உள்ளது. இந்த மயான பகுதிக்கு சொந்தமான இடத்துக்கு காந்தி நகர் பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் கோர்ட்டு மூலமாக தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடைபெற்றது.

அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லறை தெரு, மணியம்மை தெருவை சேர்ந்த பொதுமக்கள் பலமுறை போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். அவர்களும் இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். இது சம்பந்தமாக ஆரணி வருவாய் கோட்டாட்சியர் தனலட்சுமி உத்தரவின் பேரில் ஆரணி தாசில்தார் ஜெகதீசன் இரு தரப்பினரையும் அழைத்து சமாதான கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி மணியம்மை தெரு, கல்லறை தெருவை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கூட்டத்துக்கு திரண்டு வந்திருந்தனர். மயான பகுதியை பயன்படுத்தி வரும் காந்திநகர் பகுதி பொதுமக்கள் கூட்டத்திற்கு வரவில்லை. அதேபோன்று அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட நேரத்துக்கு வரவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மணியம்மை குடியிருப்பு வாசி பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் சுமார் 3 மணி நேரமாக தாசில்தார் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆரணி தாசில்தார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோர்ட்டு உத்தரவு வரும் வரை யாரும் இது சம்பந்தமாக பிரச்சினை செய்யக்கூடாது என்று கூறினார். அதற்கு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கூறுகையில் நாங்கள் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மயான பகுதி அருகாமையில் தான் வசித்து வருகிறோம்.

தற்போது சுற்றுசுவர் எழுப்புவதால் அப்பகுதியை சுற்றி வருவதற்கு மிகவும் சிரமமாக உள்ளது என தெரிவித்தனர். இதில் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால் ஆர்டிஓ விடம் தெரிவித்து, கூறுவதாக தாசில்தார் தெரிவித்தார், அதை தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.  மற்றொரு தரப்பினர் கூட்டத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடதக்கது.

Tags:    

Similar News