ஆற்றுப்பாலம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் உயிரிழப்பு

கண்ணமங்கலம் வெள்ளூர் ஆற்றுப்பாலம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2022-07-04 07:11 GMT

விபத்துக்குள்ளான கார் மற்றும் மோட்டார் சைக்கிள்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்த வேலாயுதம் என்பவரின் மகன் பார்த்திபன் (வயது 27), கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கொடுக்கப்பட்டு பகுதியை சேர்ந்த சிவக்குமார் (42) இவர்கள் இருவரும் வேலூருக்கு மோட்டார்சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு சென்று கொண்டிருந்தனர்.

கண்ணமங்கலத்தை அடுத்த சந்தவாசல் அருகே உள்ள வெள்ளூர் கமண்டல நதி ஆற்றுப்பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது திருவண்ணாமலையில் இருந்து வெள்ளூர் நோக்கி வந்த கார் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் வந்த பார்த்திபன், சிவக்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்த சந்தவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News