தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு: உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு

ஆரணி அருகே தந்தூரி சிக்கன் சாப்பிட்ட 12ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு.

Update: 2022-06-02 07:32 GMT

உணவகத்தில் ஆய்வு மேற்கொண்டு வரும் நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள்.

ஆரணி ஆரணிப்பாளையம் மோகனன் தெருவை சேர்ந்தவர் ஆர்.கணேஷ். இவரின் மகன் திருமுருகன் (வயது 17). இவர், பிளஸ்-2 படித்து வந்தார். இறுதித்தேர்வு முடிந்ததும் அவரும், சக மாணவர்களும் சேர்ந்து ஆரணி பழைய பஸ் நிலையம் எதிரே உள்ள ஒரு ஓட்டலில் அசைவ உணவு (தந்தூரி சிக்கன் மற்றும் சிக்கன் பிரியாணி) சாப்பிட்டுள்ளார்.

அதன் பிறகு மாணவர்கள் அனைவரும் ஒரு தியேட்டரில் சினிமா பார்த்தனர். இதையடுத்து அவர்கள் தங்களின் வீடுகளுக்கு சென்று விட்டனர். இரவு தூங்கி விட்டு காலை எழுந்ததும் திருமுருகன் கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டுள்ளார். அவருக்கு, ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்பினார். 2 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை அளித்துள்ளனர். திருமுருகன் ஏற்கனவே சாப்பிட்டு இருந்த அசைவ உணவு நஞ்சாகி போனதால் குடல் பாதிக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது உடல்நலம் மோசமாகி இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை, பரிசோதனை செய்த டாக்டர்கள், திருமுருகன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். அசைவ உணவு சாப்பிட்டு பிளஸ்-2 மாணவர் பரிதாபமாக உயிரிழந்ததாகவும், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரியும் ஆரணி டவுன் போலீசில் இந்து முன்னணி சார்பில் புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

திருமுருகனின் சாவுக்கு அவன் சாப்பிட்ட அசைவ உணவே காரணம் எனத் தெரிய வந்துள்ளது. எனவே அந்த ஓட்டலை பூட்டி 'சீல்' வைத்து, அதன் உரிமையாளரை கைது செய்ய வேண்டும். எனவே திருமுருகனின் சாவுக்கு தகுந்த நீதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆரணி வருவாய் கோட்டாட்சியர், துணை போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கும் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று மாணவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக உணவகத்தில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர். ஆரணி நகராட்சி ஆணையர் தமிழ்ச்செல்வி, எலைட் 5 ஸ்டார் உணவகத்தில் ஆய்வு நடத்தி வருகிறார். உணவகம் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் மாணவனின் தந்தை புகார் அளித்த நிலையில் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News