திருட்டு வழக்கில் கைதானவர்கள் கொலையாளிகள்: விசாரணையில் 'திடுக்' தகவல்

உடுமலையில் வீடுபுகுந்து நகை திருடிய வழக்கில் பிடிபட்ட இருவரும், கொலை செய்துவிட்டு தப்பி வந்தவர்கள் என்ற 'திடுக்' தகவல், போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.

Update: 2022-08-05 09:07 GMT

உடுமலையில், வீடுபுகுந்து 12 சவரன் நகை திருடிய வழக்கில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம், உடுமலையை அடுத்த வெஞ்சமடை முத்துச்சாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் சிவசாமி (வயது 55). இவர் உடுமலை பஸ் ஸ்டாண்ட்  எதிரில் துணிக்கடை வைத்துள்ளார். கடந்த மாதம் 12ம் தேதி இவரது வீட்டில் யாரும் இல்லாத போது, கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம நபர்கள், 12 சவரன் நகையை திருடிச் சென்றனர். இதுகுறித்து சிவசாமி உடுமலை போலீஸ் ஸ்டேஷனில்  புகார் கொடுத்தார்.  போலீசார் வழக்கு பதிவு விசாரித்தனர். 

உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப்-இன்ஸ்பெக்டர் சரவண குமார், ஏட்டு பஞ்சலிங்கம் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். 200-க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். இதில் குற்றவாளிகள் சொகுசு காரில் வந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இந்நிலையில் நேற்று உடுமலை-தாராபுரம் ரோட்டில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் பிடித்தனர். அவர்கள், சிவகங்கை மாவட்டம் ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த முனியாண்டி மகன் தங்கராஜ் (வயது 38), திருப்புவனத்தை சேர்ந்த முத்துப்பாண்டி மகன் தினேஷ்குமார் என்பது விசாரணையில் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4.5 சவரன்நகை பறிமுதல் செய்யப்பட்டது. 

மேலும் அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தங்கராஜின் அண்ணனை கொன்றவர்களை பழி வாங்கும் விதமாக, கடந்த 2 வாரங்களுக்கு முன் சிவகங்கையில் ஒருவரை கொலை செய்து விட்டு தப்பி வந்துள்ளனர்.அத்துடன் கோவை, திண்டுக்கல், தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தேடப்படும் குற்றவாளிகள் இவர்கள் என்பதும் தெரிய வந்தது.  இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்திய போலீசார், சிறையிலடைத்தனர். 

Tags:    

Similar News