உடுமலையில் பராமரிப்பின்றி 20 ஏக்கர் இடம்; மொத்த விற்பனை காய்கறி மையம் அமைக்க கோரிக்கை

Tirupur News- உடுமலையில் பராமரிப்பின்றி உள்ள 20 ஏக்கர் பரப்பளவில், மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Update: 2024-02-09 07:19 GMT

Tirupur News- பயனற்று காட்சியளிக்கும்  இந்த பகுதியில் காய்கறி மொத்த விற்பனை மையம் அமைக்க கோரிக்கை.

Tirupur News,Tirupur News Today- உடுமலை அருகே, வீடுகள் சிதிலமடைந்தும், புதர் மண்டி காணப்படும் வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான, 20 ஏக்கர் பரப்பளவில், காய்கறி விவசாயிகள் பயன் பெறும் வகையில், மொத்த விற்பனை காய்கறி மார்க்கெட் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலை அருகே மருள்பட்டியில், 1994ம் ஆண்டு, வீட்டு வசதி வாரியத்தால், 20 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இங்கு, சிறிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு என, ஏ, பி,சி., என மூன்று பிரிவுகளில், 5 கோடி ரூபாய் மதிப்பில், 320 வீடுகள் கட்டப்பட்டன. ரோடுகள், மழை நீர் வடிகால், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி என அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டன.

அப்போதைய நிலையில், போக்குவரத்து வசதியில்லாதது, அதிக விலை, நகர விரிவாக்கம் இல்லாத பகுதி தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால், வீடுகள் விற்பனையாகவில்லை.

வீட்டு வசதி வாரிய அதிகாரிகளும் கண்டு கொள்ளாத நிலையில், வீடுகளிலிருந்த கதவு, ஜன்னல் என அனைத்து பொருட்களும் திருடப்பட்டன. கட்டடம் கட்டப்பட்டு, 30 ஆண்டுகளுக்கு மேலானதாலும், வீடுகள் மற்றும் கட்டுமானங்கள் அனைத்தும் சிதிலமடைந்து காணப்படுகிறது.

தற்போது, இந்த நிலம் முழுவதும் புதர் மண்டியும், சமூக விரோத செயல்கள், குற்றச்செயல்கள் நடக்கும் மையமாகவும் மாறியுள்ளது. அரசுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலம் வீணாக உள்ளது

மொத்த காய்கறி விற்பனை மையம்

உடுமலை, மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் வட்டாரத்தில், காய்கறி சாகுபடி பிரதானமாக உள்ளது. தக்காளி, சின்னவெங்காயம், கத்தரி, மிளகாய், பாகற்காய், பீர்க்கன் என பந்தல் காய்கறி சாகுபடியும் அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.

ஆண்டு முழுவதும் ஏறத்தாழ, 30 முதல், 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில், காய்கறி சாகுபடி செய்யப்படுகிறது. அதே போல், தென்னை சாகுபடியும் பிரதானமாக உள்ளது.

உடுமலை பகுதிகளில் விளையும் காய்கறிகள், உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து விவசாயிகள் ஏல முறையில் விற்பனை செய்து வருகின்றனர்.

சென்னை, மதுரை, திருச்சி என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்து வரும் வியாபாரிகள், காய்கறிகளை கொள்முதல் செய்து, லாரிகள் வழியாக பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்கின்றனர்.

தினமும் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், வியாபாரிகள் வரும், உடுமலை சந்தையில், இட நெருக்கடி நிரந்தரமாக உள்ளது. காய்கறிகள் இறக்கி வைக்கவும், வாகனங்கள் வந்து செல்லவும் முடியாமல் திணறும் சூழல் காணப்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காண, உடுமலை பகுதிகளில் காய்கறி சாகுபடி பரப்பு அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கும் வகையில், காய்கறி விற்பனை மையம் அமைக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

ஆந்திர மாநிலத்தில், விவசாயிகள் பயன்பெறும் வகையில், 'ரைத்து பஜார்' என பெரிய அளவிலான மார்க்கெட்கள் அரசு சார்பில் செயல்படுத்தப்படுகிறது.

அதே போல், கர்நாடகா, கேரளா என அனைத்து மாநிலங்களிலும், விவசாய விளை பொருட்களான, காய்கறிகள், பழ வகைகள் மொத்த விற்பனைக்கு என பிரமாண்டமான மார்க்கெட்கள் உள்ளன.

இங்கு, பெரிய அளவிலான மைதானம், வியாபாரிகளுக்கான கடைகள், குறைந்த பட்ச ஆதார விலைக்கு மேல் மட்டுமே கொள்முதல், உடனடி பணம் வழங்க வேண்டும்.

கமிஷன் இல்லை, வாகனங்கள் நிறுத்த வசதி, விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் கலாசி தொழிலாளர்களுக்கான ஓய்வறைகள் என அனைத்து வசதிகளுடன், இந்த மார்க்கெட்கள் அமைந்துள்ளன.

விவசாயிகள் கொண்டு வரும், விளை பொருட்கள் விற்பனையாகாமல் இருந்தாலோ, கூடுதல் விலையை எதிர்பார்த்து இருப்பு வைக்க விவசாயிகள் விரும்பினால், பிரமாண்டமான, குளிர் பதன கிடங்கு வசதிகளும் இங்கு உள்ளன.

இதன் வாயிலாக, விவசாயிகளுக்கு உரிய விலை கிடைப்பதோடு, உள்ளூர் உற்பத்தி செலவினத்திற்கு ஏற்ப, தினமும் ஆதார விலை அதிகாரிகள் நிர்ணயிப்பதால், நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை.

எனவே, விவசாயிகள் பயன்பெறும் வகையில், வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான, 20 ஏக்கர் பரப்பளவில், தேங்காய், இளநீர் மற்றும் காய்கறிகள் மொத்தம் மற்றும் சில்லரை விற்பனைக்கு என தனி மையம் அமைக்கலாம்.

இதன் வாயிலாக, விவசாயிகளுக்கும் உரிய விலை கிடைப்பதோடு, அரசுக்கும் வருவாய் கிடைக்கும்.

உடுமலை பகுதிகளில் அதிகளவு காய்கறிகள், கீரைகள் விளைவதால், சூப்பர் மார்க்கெட் நடத்தும் ஏராளமான தனியார் நிறுவனங்கள் நேரடி கொள்முதல் மையங்கள், இதே பகுதியில் அமைத்துள்ளன.

தமிழக விவசாயிகளுக்கு என மொத்த விற்பனை மையம் அமைத்தால், காய்கறி உற்பத்தி மற்றும் விற்பனையில் உடுமலை பகுதி வளர்ச்சியடையும் என்பது அப்பதி விவசாயிகளின் ஒட்டுமொத்த கோரிக்கையாக எழுந்துள்ளது.

Tags:    

Similar News