அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; ஏப். 25ல் கொடியேற்றம்

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டம், அவிநாசிலிங்கேஸ்வர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா; ஏப். 25ல் கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

Update: 2023-03-19 10:05 GMT

Tirupur News,Tirupur News Today- அவிநாசிலிங்கேஸ்வர் கோவில் முகப்பு தோற்றம் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசியில் உள்ள  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா, அடுத்த மாதம், ஏப்ரல்  25-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

அவிநாசியில் உள்ள கருணாம்பிகை அம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்றும், தமிழ்நாட்டில் மூன்றாவது பெரிய தேர் உடையது என்ற பல சிறப்புகள் பெற்று விளங்குகிறது. முதலை விழுங்கிய பாலகனை சுந்தரர் பதிகம் பாடி மீட்ட திருத்தலமான கருணாம்பிகை உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் என்ற தனிச்சிறப்பும் உண்டு. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் தேர் திருவிழா நடைபெறும்.

நடப்பு ஆண்டுக்கான தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 25-ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. 26-ம் தேதி சூரியசந்திர மண்டல காட்சிகள், 27-ம் தேதி அதிகார நந்தி அன்ன வாகன காட்சிகள், 28-ம் தேதி கைலாச வாகன காட்சி, 29-ம் தேதி பஞ்சமூர்த்திகள் புறப்பாடு 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் வைபவம் நடக்கிறது. 30-ம் தேதி கற்பக விருட்சம், திருக்கல்யாண வைபவம் நடக்கிறது.

தேரோட்டம்

மே மாதம் 1-ம் தேதி அதிகாலை அதிர்வேட்டுகள் முழங்க பஞ்சமூர்த்திகள் திருத்தேருக்கு எழுந்தருளலும், 2-ம் தேதி காலை 10 மணிக்கு தேர்வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. மீண்டும் 3-ம் தேதி தேர் இழுக்கப்பட்டு நிலை வந்தடைகிறது.

மறுநாள் 4-ம் தேதி காலை அம்மன் தேர், சுப்பிரமணியர், சண்டிகேசுவரர் ஆகிய தேர் இழுக்கப்படுகிறது. 5-ம் தேதி பரிவேட்டை நிகழ்ச்சியும், 6-ம் தேதி இரவு தெப்பத்தேர் நிகழ்ச்சியும் நடக்கிறது. 7-ம் தேதி நடராசப்பெருமான் தரிசனம் நடக்கிறது. 8-ம் தேதி மஞ்சள் நீர் விழாவுடன் தேர்த் திருவிழா நிறைவு பெறுகிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் பெரியமருதுபாண்டி செய்து வருகிறார்.

கோவில் சிறப்பு

சைவ சமயக் குரவர்களால் பாடல் பெற்ற, கொங்கு நாட்டுத் தேவாரத் தலங்களில் சிறப்பு பெற்றது தட்சிண வாரணாசி என்னும் அவிநாசி. கோயம்புத்தூர் மாநகரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ளது அவிநாசி. இங்கு வீற்றிருக்கும் அவிநாசியப்பர் ஆலயம் பக்தர்களின் குறைகளைப் போக்கும் ஒப்பற்ற தலமாக திகழ்கிறது.ஆலயத்தின் வெளியில் இருந்து பார்த்தால் கம்பீரமான இரட்டைக் கோபுரங்கள் அருகருகே உள்ளன. ஏழு கலசங்களுடன் கூடிய ஏழுநிலை ராஜகோபுரம் சுவாமி சன்னிதிக்கு எதிரிலும், அதை ஒட்டி தென்புறமாக ஐந்து நிலை ராஜகோபுரம் அம்பாள் சன்னிதிக்கு எதிரிலும் அமைந்திருப்பது கண்கொள்ளாக் காட்சியாக தென்படுகிறது.

ராஜகோபுரத்துக்கு முன்பு உள்ள பெரிய விளக்குத் தூணில், சுவாமியைப் பார்த்தபடி நந்தி சிலை ஒன்று உள்ளது. அதன் அருகே வாயைப் பிளந்தபடி ஒரு முதலையும், அதன் வாயில் இருந்து ஒரு சிறுவன் வெளியே வரும் காட்சியும் அமைந்துள்ளது அனைவரையும் கவருவதாக விளங்குகிறது.

Tags:    

Similar News