வெள்ளக்கோவில்; கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவங்கியது

Tirupur News- திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை துவங்கியது.

Update: 2024-04-10 08:55 GMT

Tirupur News- கண்ணபுரம் மாட்டுச் சந்தை துவங்கியது. 

Tirupur News,Tirupur News Today- திருப்பூா் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே வரலாற்றுச் சிறப்புமிக்க கண்ணபுரம் மாட்டுச்சந்தை நேற்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கியது.

கண்ணபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் நடைபெறும் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 7 நாள்களுக்கு காங்கேயம் இன மாடுகளுக்கு மட்டுமேயான பிரத்யேக சந்தை நடைபெற்று வருகிறது. மன்னராட்சிக் காலத்திலிருந்து இந்தச் சந்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

தற்போது வரும் 25- ம் தேதி பொங்கல் திருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்பாக 23- ம் தேதி இதே ஊரில் உள்ள விக்கிரம சோழீஸ்வரா் கோவில் தோ் திருவிழாவும் நடைபெற உள்ளது. சந்தை முதல் நாளில் திருப்பூா் மாவட்டம் உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 1,200 காங்கேயம் இன ஜல்லிக்கட்டு காளைகள், எருதுகள், மாடுகளை விவசாயிகள் விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனா்.

இங்கு 2வயதுடைய கிடாரிக்கன்று ரூ.60 ஆயிரம், 2 வயது காளைக்கன்று ரூ.55 ஆயிரம், கறவை மாடு ரூ. 1 லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரையும், காளை ரூ.3 லட்சம் வரையிலும் விலை கூறப்படுகிறது. ஒருசில குதிரைகளும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. பல்வேறு மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து மாடுகளை வாங்க வருபவா்கள் முழுமையாக வந்த பிறகு தான் சந்தை களைகட்டும் எனக் கூறப்படுகிறது.

தற்போது மக்களவைத் தோ்தல் சமயமாக இருப்பதால் வியாபாரிகள் பணம் கொண்டு வருவதில் சிக்கல் இருப்பதால் மாடுகள் பெரியளவில் விலை போக வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Tags:    

Similar News