திருப்பூரில் அரசு பஸ்கள் ஜப்தி

Tirupur News Today Tamil -திருப்பூரில் விபத்து நஷ்ட ஈடு வழங்காததால், 4 அரசு பஸ்களை கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.

Update: 2022-10-12 08:34 GMT

இழப்பீடு வழங்காததால் நடவடிக்கை; திருப்பூரில் அரசு பஸ்கள் ஜப்தி

Tirupur News Today Tamil -அவிநாசி துலுக்கமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார் (வயது 32). பனியன் நிறுவன உரிமையாளர். இவர் கடந்த 5-5-2018 அன்று, மோட்டார் பைக்கில் திருப்பூர் வெங்கமேடு பகுதியில் சென்றபோது, அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதி உயிரிழந்தார். அவருக்கு இழப்பீடு கேட்டு, திருப்பூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய கோர்ட்டில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த 17-11-2021 அன்று, ரூ.33 லட்சத்து 82 ஆயிரத்து 672-ஐ மோகன்குமார் குடும்பத்துக்கு வழங்க, அரசு போக்குவரத்து கழகத்துக்கு கோர்ட் உத்தரவிட்டது. ஆனால் இழப்பீடு தொகை வழங்காததால் அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து, கோவை கோட்டத்துக்கு உட்பட்ட அரசு பஸ்சை கோர்ட் ஊழியர்கள் நேற்று, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் வைத்து ஜப்தி செய்து கோர்ட் வளாகத்துக்கு கொண்டு வந்தனர்.

* குன்னத்தூரை சேர்ந்தவர் குணசீலன் (36). பனியன் டெய்லர். இவர் கடந்த 17-9-2017 அன்று, அரசு பஸ்சில் பயணம் செய்தபோது குன்னத்தூர் அருகே ஒச்சாம்பாளையத்தில் பஸ் விபத்தில் சிக்கியது. இதில் குணசீலன் இறந்தார். அவரது குடும்பத்தினர், விபத்து இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்தனர். அவரது குடும்பத்துக்கு ரூ.18 லட்சத்து 74 ஆயிரத்து 350 வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு, கடந்த 25-2-2020 அன்று கோர்ட் உத்தரவிட்டது. இதுவரை இழப்பீட்டு தொகை வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய, நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி கோவை கோட்டத்துக்குட்பட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்து கோர்ட் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டது.

* பல்லடத்தை சேர்ந்தவர் தீபா (19). இவர் உடுமலையில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 22-9-2016 அன்று காரில் தீபா சென்றபோது, குடிமங்கலம் அருகே அரசு பஸ் மோதி விபத்துக்குள்ளானார். இதில் அவருக்கு தலை, தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டு சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் விபத்து நஷ்டஈடு கேட்டு, மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தனர். அவரது குடும்பத்துக்கு ரூ.16 லட்சத்து 99 ஆயிரத்து 899-ஐ விபத்து நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று அரசு போக்குவரத்து கழகத்துக்கு, கடந்த 20-1-2021 அன்று தீர்ப்பானது.  இழப்பீடு வழங்காததால் நீதிபதி ஸ்ரீகுமார், அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து கோர்ட் ஊழியர்கள் நேற்று, திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் வைத்து, கோவை கோட்ட அரசு பஸ்சை ஜப்தி செய்தனர்.

* திருப்பூர் ஈட்டிவீரம்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (48). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 5-11-2016 அன்று மோட்டார் பைக்கில் அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்ட் முன் சென்றபோது அரசு பஸ் மோதி, படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றார். அவரது குடும்பத்தினர் விபத்து இழப்பீடு கேட்டு, கோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அவருக்கு ரூ.16 லட்சத்து 36 ஆயிரத்து 503-ஐ இழப்பீடாக வழங்க கடந்த 8-1-2021 அன்று உத்தரவானது. ஆனால் இழப்பீடு வழங்காததால், அரசு பஸ்சை ஜப்தி செய்ய நீதிபதி ஸ்ரீகுமார் உத்தரவிட்டார். அதன்படி நேற்று கோவை கோட்ட அரசு பஸ் ஜப்தி செய்யப்பட்டது.

வெவ்வேறான விபத்து வழக்குகளில், ஒரே நாளில் அரசு பஸ்களை அடுத்தடுத்து கோர்ட் ஊழியர்கள் ஜப்தி செய்தது, பஸ் ஸ்டாண்ட் பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News