ஒப்பந்தம் செய்த நாடுகளின் தடைகள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள் புகாா் தெரிவிக்க ஏஇபிசி வேண்டுகோள்

Tirupur News- இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் தடை சிக்கல்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என ஏஇபிசி சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

Update: 2024-01-22 06:01 GMT

Tirupur News- திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் (ஏஇபிசி) வெளியிட்ட அறிவிப்பு (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- இந்தியா ஒப்பந்தம் செய்துள்ள நாடுகளின் தடை சிக்கல்கள் குறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள் புகாா் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

பின்னலாடை தயாரிப்பில் திருப்பூர் மாநகருக்கு தனிச்சிறப்பு உண்டு. இந்திய அளவில் விவசாயத்துக்கு அடுத்தபடியாக ஜவுளித்தொழில் விளங்கி வருகிறது. ஆயத்த ஆடை தயாரிப்பில் திருப்பூர் உற்பத்தியாளர்கள் அதிகம் ஈடுபட்டு வருகிறார்கள். ஆண்டுதோறும் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் இந்திய அளவில் கணக்கீடு செய்யப்படுகிறது. 

அதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.10 ஆயிரத்து 787 கோடியே 3 லட்சத்துக்கு நடந்துள்ளது. இது கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.12 ஆயிரத்து 216 கோடியே 35 லட்சத்துக்கு நடந்துள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11.70 சதவீதம் வர்த்தகம் குறைவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதுபோல் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 9 மாதங்களில் இந்திய அளவில் ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.83 ஆயிரத்து 852 கோடியே 3 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. கடந்த 2022-ம் ஆண்டு இதே கால கட்டத்தில் ரூ.94 ஆயிரத்து 193 கோடியே 13 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டை ஒப்பிடுகையில் 10.98 சதவீதம் குறைவாக வர்த்தகம் நடைபெற்றுள்ளது.

இதுபோல் செயற்கை நூலிழை ஆடை ஏற்றுமதி வர்த்தகம் ரூ.28 ஆயிரத்து 351 கோடியே 27 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டு ரூ.29 ஆயிரத்து 267 கோடியே 10 லட்சம் மதிப்பில் நடந்துள்ளது. முந்தைய ஆண்டைவிட 3.13 சதவீதம் குறைவாகும். இந்திய அளவில் கடந்த ஆண்டு ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம் குறைந்துள்ளது. வரும் நாட்களில் ஆர்டர் வருகை அதிகரித்து ஏற்றுமதி வர்த்தகம் மேம்படும் வாய்ப்புள்ளதாக ஏற்றுமதியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்தின் (ஏஇபிசி) கூடுதல் இயக்குநா் ஈஸ்வரசுந்தா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ஆயத்த ஆடை ஏற்றுமதியில் தொடா்புடைய நாடுகளில் நிலவும் பிரச்னைகள் குறித்து மத்திய ஜவுளி அமைச்சகம் கருத்து கேட்டுள்ளது. இது வரும் ஆண்டுகளில் வா்த்தகத்தை மேம்படுத்தும் வகையில் ஒப்பந்த நாடுகளுடனான வா்த்தகத்தில் உள்ள இடா்பாடுகள் குறித்து கருத்து கேட்டு வருகிறது.

இதில் சுங்க வரி, பருத்தி, ஆடை உற்பத்தியில் பயன்படுத்தும் ரசாயனம், மின்சார மற்றும் தண்ணீா் பயன்பாடு, தரச்சான்று என பல்வேறு தர நிா்ணயத்தை இறக்குமதி செய்யும் நாடுகள் எதிா்பாா்க்கின்றன.

நேரடி வா்த்தகம் செய்யும் ஏற்றுமதியாளா்களுக்கு மட்டுமே உண்மையான பிரச்னை தெரியும். ஆயத்த ஆடை ஏற்றுமதியாளா்கள் எதிா்கொள்ளும் வா்த்தகத்துக்கான வரி அல்லாத தடை சிக்கல்களாக உள்ள ஆவணம், சான்றிதழ், தரம், ரசாயனம், சாயங்கள், வடிவமைப்பு, லேபிளிங், விநியோக கட்டுப்பாடு, தோற்ற விதிகள், தோற்ற சான்றிதழ் போன்ற தடை சிக்கல்களை மத்திய அமைச்சகம் கேட்கிறது.

இதுதொடா்பாக ஏஇபிசி உறுப்பினா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் அளிக்கும் தகவல்களை தொகுத்து மத்திய ஜவுளி அமைச்சகத்திடம் வழங்க இருக்கிறது. ஆகவே, ஏற்றுமதியாளா்கள் தங்களது கருத்துகளை ஏஇபிசி அலுவலகத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News