திருப்பூரில் மதுபானம் கடத்திய 2 போலீசார் சஸ்பெண்ட் : விசாரணைக்கு எஸ்பி உத்தரவு

திருப்பூரில், மதுபானம் கடத்திய இரண்டு போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணையை நடத்த, எஸ்பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Update: 2021-06-29 10:33 GMT

கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால், திருப்பூர் மாவட்டத்தில் எஸ்பி. சசாங் சாய் உத்தரவின் பேரில், போலீசார் தீவிர வாகனச்சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி, பல்லடம்,  தாராபுரம் சாலை கள்ளிப்பாளையம் சோதனைச்சாவடியில், இரு தினங்களுக்கு முன்பு, காமநாயக்கன்பாளையம் போலீசார் வாகனங்களை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, அவ்வழியாக வேகமாக வந்த கார், சோதனைச்சாவடியில் நிற்காமல் வேகமாக சென்றது; அப்போது  தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. அங்கு வந்த போலீஸார், காரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காரில் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் இருந்தன.

அதுமட்டுமின்ரி, பல்லடம் காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலரின் அடையாள அட்டையும் காரில் இருந்தது. மது பாட்டில்களை பறிமுதல் செய்த காமநாயக்கன்பாளையம் போலீசார்,  பல்லடம் மற்றும் மங்கலம் காவல் நிலையத்தில் பணிபுரியும் முத்துச்சுருளி, துரைமுருகன் என்ற 2 காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

மதுபானக் கடத்தலை தடுக்க வேண்டிய போலீசார், மதுவை கடத்தி வந்தது, திருப்பூர் மாவட்ட போலீசாருக்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தியது. இதில் தொடர்புடைய 2 காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்து, திருப்பூர்  மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் உத்தரவிட்டார். அவர்கள் இருவரிடமும் போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News