கோரிக்கைகளை கண்டுகொள்ளாத தமிழக அரசு; போராட்டம் நடத்த அரசு ஊழியர்கள் ஆலோசனை

Tirupur News. Tirupur News Today- அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை தொடர்ந்து தமிழக அரசு அலட்சியப்படுத்தும் நிலையில், போராட்டங்களை நடத்த ஆலோசிக்கப்பட உள்ளது.

Update: 2023-05-28 10:14 GMT

Tirupur News. Tirupur News Today- அரசு ஊழியர் சங்க முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம், பல்லடத்தில்  நடந்தது.

Tirupur News. Tirupur News Today- தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் முதலாம் மாநில பிரதிநிதித்துவ பேரவை வரவேற்பு குழு கூட்டம், பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் தலைமை வகித்தார். இதில் மாநில தலைவர் தமிழ்செல்வி, திருப்பூர் மாவட்ட தலைவர் செந்தில்குமார், மாவட்ட செயலாளர் ஈஸ்வரமூர்த்தி மற்றும் பல்லடம், உடுமலை ,தாராபுரம், மடத்துக்குளம், அவிநாசி வட்டார நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் மாநில பொதுச்செயலாளர் லட்சுமி நாராயணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

அரசு ஊழியர்களுக்கு எப்போதெல்லாம் மத்திய அரசு அகவிலைப்படியை உயர்த்துகிறதோ, அப்போதெல்லாம் மாநில அரசும் அகவிலைப்படி உயர்த்தப்படும் என தமிழக அரசு அரசாணையில் தெரிவித்துள்ளது. ஆனால் தொடர்ச்சியாக, கடந்த நான்கு தவணைகளாக அகவிலைப்படி காலதாமதமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டிலிருந்து அரசு ஊழியர்களின் ஒப்படைப்பு விடுப்பு பணப்பலன் என்பது வழங்கப்படாமல் உள்ளது.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகியும் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்யாமல் மௌனம் சாதித்து வருகிறது. முன்பு நிதி அமைச்சராக இருந்த பி .டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய முடியாது என அறிவித்தார். தற்போது புதிதாக பதவியேற்றுள்ள நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்வது குறித்து தற்போது அறிவிப்பு வெளியிட முடியாது என தெரிவித்து வருகிறார்.

அதே போல தொகுப்பூதி யத்தில் பணியாற்றி வரும் வருவாய் கிராம உதவியாளர்கள், சத்துணவு ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஊர்புற நூலகர்கள் ஆகியோரை நிரந்தர அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைத்த போது அவர்களை பகுதி நேர ஊழியர்கள் என அரசு தெரிவித்து வந்தது. இதற்கிடையேஅரசு புதிதாக காலை உணவு திட்டம் என அறிவித்துவிட்டு அதை சத்துணவு ஊழியர்களை கொண்டு நிறைவேற்றாமல் தனியாரிடம் ஒப்படைக்க அரசு திட்டமிடுகிறது.

சத்துணவு திட்டத்தில் மதிய உணவிற்கு வழங்கப்பட்டு வரும் தொகையை விட அதிகமாக காலை உணவு திட்டத்திற்கு அரசு நிதி ஒதுக்கி உள்ளது. தொடர்ச்சியான எங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண தொடர் போராட்டமே தீர்வு தரும் என நாங்கள் நம்புகிறோம். ஏற்கனவே 2 தொடர் போராட்டங்களை நடத்தியுள்ளோம். வரும் ஆகஸ்ட் 12,13-ம் தேதிகளில் திருப்பூர் மாவட்டத்தில் அரசு ஊழியர்களை ஒன்றிணைத்து மாநில பேரவை கூட்டத்தை நடத்தி, அடுத்த கட்ட போராட்டங்கள் குறித்து விவாதித்து அறிவிக்க உள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News