மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

தனியார் இரும்பு உருக்கு ஆலையால் கடும் பாதிப்பு ஏற்படுவதாக, மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2021-10-30 01:15 GMT

மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட, அனுப்பட்டி மக்கள்.

பல்லடம் அருகே அனுப்பட்டியில் செயல்பட்டு வரும், தனியார் இரும்பு உருக்கு ஆலையால், கடும் பாதிப்பு ஏற்பட்டு வருவதாக கூறி, பொதுமக்கள் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர்.

அப்பகுதியினர் கூறியதாவது: கடந்த, பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தனியார் இரும்பு உருக்கு ஆலை அனுப்பட்டியில் செயல்படுகிறது. ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் நச்சு புகையால், கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. விவசாயமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. அரசின் விதிமுறைகளை ஆலை நிர்வாகம் பின்பற்றுவதில்லை. மாசு ஏற்படுவதை தடுக்க மரக்கன்றுகள் வைத்திருந்தால், இன்று அவை மரங்களாக மாறி இருக்கும்.

இதுகுறித்து பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. ஆலையை நிரந்தரமாக மூடாவிட்டால், கிராம மக்கள் அனைவரும் திரண்டு வந்து காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் கூறினர். இதுகுறித்து, மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் வனஜாவிடம், மக்கள் புகார் மனு வழங்கினர்.

Tags:    

Similar News