கூலித் தொழிலாளிகளாக மாறும் விசைத்தறி முதலாளிகள்

கூலிக்கு நெசவு செய்யும் தொழில் நசிந்து வருவதாக, தெரிவிக்கப்பட்டது.

Update: 2021-12-06 14:45 GMT

விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்.

கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம், பல்லடம் அருகே கோம்பக்காடு சிவசக்தி திருமண மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி, துணை தலைவர் கோபாலகிருஷ்ணன், துணை செயலாளர் ஈஸ்வரன், பொருளாளர் பூபதி முன்னிலை வகித்தனர்.

சங்க தலைவர் பழனிசாமி பேசியதாவது:

2014ம் ஆண்டுக்குப்பின் நெசவு கூலி உயர்த்தப்படவில்லை. விலைவாசி உயர்வு, உதிரி பாகங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, தொழிலாளர்கள் கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருந்தும், நெசவு கூலி மட்டும் உயர்த்தப்படவில்லை. அதனடிப்படையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கூலி உயர்வுக்கு பின்பும், நஷ்டமே ஏற்படும். முதலீடு போட்ட தொழிலில் எந்த பயனும் இல்லை. தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் அட்வான்ஸ் தொகை நாளுக்கு நாள் கூடி வருகிறது.

இப்போதுள்ள கூலி அடிப்படையில், தொழில் செய்ய முடியுமா? சொந்தமாக தறி வைத்திருந்த பலர், மீண்டும் கூலி அடிப்படையில் நெசவு செய்ய துவங்கி விட்டனர். இவ்வாறு, அவர் பேசினார். பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பின், சோமனுார் ரகங்களுக்கு, 23 சதவீதம், இதர ரகங்களுக்கு, 20 சதவீதம் கூலி உயர்வும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

Tags:    

Similar News