பல்லடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தீவிரம்

ஐகோர்ட் உத்தரவை தொடர்ந்து, கரடிவாவியில், நீர்நிலை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றும் பணி நடந்தது.

Update: 2022-03-31 07:00 GMT

கரடிவாவிபுதுாரில் சின்னக்குட்டை பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு வருகிறது. 

பல்லடம் அருகே கரடிவாவி ஊராட்சி, கரடிவாவிபுதுாரில் சின்னக்குட்டை உள்ளது. சுற்றுவட்டார பகுதியில், விளை நிலங்களுக்கு நீராதாரமாக உள்ள இக்குட்டையை சுற்றிலும், ஏறத்தாழ ஒரு ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்பட்டு, 20 ஆண்டுகளாக ஆக்கிரமிப்பில் இருந்தன.

இதுகுறித்து, விவசாயி கார்த்திகேயன் என்பவர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். கடந்த பிப்ரவரி மாதம் ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடங்களை அகற்றும் பணி துவங்கியது.

இருப்பினும், 20 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்க தீர்மானித்து வருவதால், அவர்களின் வீடுகளை அகற்ற அரசு சார்பில் அவகாசம் கேட்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், 'ஆக்கிரமிப்பாளர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்க தேவையில்லை. ஒரு வார காலத்துக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர். இதனால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. ஏறத்தாழ ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள குடியிருப்புகள், குடோன்கள், கட்டடங்கள் பொக்லைன் மூலம் இடித்து அகற்றப்பட்டன.

Tags:    

Similar News