பல்லடம்; மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.43.40 கோடி கடனுதவி வழங்கல்

Tirupur News- மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி, பல்லடத்தில் நேற்று நடந்தது.

Update: 2024-02-09 07:17 GMT

Tirupur News- பல்லடத்தில், மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. (மாதிரி படம்)

Tirupur News,Tirupur News Today- பல்லடத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று ( வியாழக்கிழமை) நடந்தது. அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தலைமை வகித்தனர். திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது,

திருப்பூர் மாவட்டத்தில் மட்டும், 444 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு, 43.40 கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொழில் வியாபாரத்தை விரிவுபடுத்த மகளிருக்கு பெரிதும் உதவும்.

இது அவர்களின் வாழ்வாதாரம் மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும். தாய்மார்கள் தங்களது சொந்த காலில் நிற்கலாம் என்பதே இதன் நோக்கம். உலகத் தொழில் முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் முதல்வர் மாநாடு நடத்தியுள்ளார். ஆனால், மஞ்சள் காமாலை உள்ளவர் கண்களுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பது போல், எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். வெளிப்படையாக நடந்துள்ளதால், இதில் வெள்ளை அறிக்கை தருவதற்கு எதுவும் இல்லை.

கடந்த ஆட்சியில் முதல்வராக இருந்த பழனிசாமியும் வெளிநாடு சென்றார். எனவே, அதற்கும் வெள்ளை அறிக்கை கேட்க வேண்டிய சூழல் ஏற்படும், என்றார்.

முன்னதாக, பல்லடத்தைச் சேர்ந்த டிவி நிருபர், கூலிப்படையினர் சிலரால் வெட்டப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 'குற்றவாளிகள் அடுத்தடுத்து கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விரைவில் இது குறித்த முழுமையான அறிக்கை வெளியிடுவார்கள்' என்றார். தொடர்ந்து, மகளிர் சுய உதவி குழுக்களுக்கான கடன் உதவியை அமைச்சர்கள் வழங்கினர். விழாவில் அரசுத்துறை அதிகாரிகள், திமுக கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். 

Tags:    

Similar News