மக்கள் கைகோர்த்தால் கொரோனாவை விரட்டலாம்: அமைச்சர் சாமிநாதன்

பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால், கொரோனாவை முழுமையாக விரட்டலாம் என, அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கூறினார்.

Update: 2021-05-31 15:25 GMT

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், நடப்பாண்டுக்கான கரும்பு அரவை செய்யும் பணிகளை அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் கலெக்டர் விஜய்கார்த்தியேகன் ஆகியோர் பார்வையிட்டுனர்.

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அருகே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் துவங்கி செப்டம்பர் வரை சர்க்கரைஉற்பத்தி நடைபெறுகிறது. நடப்பாண்டுக்கான கரும்பு அரவை செய்யும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவிய சூழ்நிலையிலும்,   64 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்யப்பட்டது. நடப்பாண்டு சுமார் 70 ஆயிரம் டன் கரும்பு அரவை செய்ய பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக அரவை பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கரும்பு அரவை பணிகளை அமைச்சர்கள் வெள்ளக்கோவில் சாமிநாதன், கயல்விழி, திருப்பூர் கலெக்டர் விஜய்கார்த்தியேகன் ஆகியோர், இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வின்போது,  அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை கட்டி 60, ஆண்டுகளுக்கு மேலாகி விட்டதால்,  ஆலையை புதுப்பிக்க அரவை திறனை மேம்படுத்தப்பத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது.

இது குறித்து, தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு,  ஆலை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும், அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார். பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறித்து ஆம்புலன்ஸ் மூலமாக ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மாவட்டம் முழுவதும் தேவையான அளவு மருத்துவ சிகிச்சை மையங்கள் உள்ளன. மேலும், நடமாடும் வாகனம் மூலம் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் உத்தரவின் பேரில், 100 குடும்பங்களுக்கு, ஒரு குழு அமைத்து வீடு வீடாக கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதற்காக வருவாய் துறை மற்றும் தன்னார்வலர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. வீடு வீடாக பரிசோதனை செய்த பிறகு தாக்கம் கட்டுப்பாடில் உள்ளது.  பொது மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால், முழுமையாக கொரோனா விரட்டிவிடலாம் என்றார்.

Tags:    

Similar News