குடிமங்கலம் பகுதியில் அகல் விளக்கு தயாரிப்பு தீவிரம்

Tirupur News- உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம், குடிமங்கலம் பகுதியில் அகல்விளக்கு தயாரிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-11-19 14:06 GMT

Tirupur News- கார்த்திகை தீப திருவிழாவுக்கு தயாராக அகல்விளக்குகள் (கோப்பு படம்)

Tirupur News,Tirupur News Today- இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான திருக்கார்த்திகை தீபத்திருவிழா வருகிற 26-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

கார்த்திகை தீபத்திருவிழா அன்று வீடுகளில் வரிசையாக தீபங்கள் ஏற்றி அழகுபடுத்துவது வழக்கம். இது போல் கோவில்களில் பக்தர்கள் புதிய விளக்குகளில் தீபங்கள் ஏற்றுவார்கள். கார்த்திகை தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை பூளவாடி பகுதியில் அகல் விளக்குகள் தயாரிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

க்ஷசிறிய விளக்குகள் முதல் பெரிய விளக்குகள் வரை பலதரப்பட்ட வகைகளில் தயார் செய்யப்பட்டுள்ளது. சிறிய அளவிலான ஆயிரம் அகல் விளக்குகள் ரூ.800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் அகல்விளக்குகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனைக்காக கொண்டு சென்று விற்பனை செய்யப்படுகிறது. இது தவிர கேரளா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அகல் விளக்குகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகிறது.

அகல் விளக்கு தயாரிப்பு குறித்து மண்பாண்ட தொழிலாளிகள் சிலர் கூறியதாவது,

உடுமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அகல் விளக்குகள் தயாரிப்பதற்கு கோதவாடி, கொழுமம் ஆகியவற்றில் உள்ள குளத்து மண் பயன்படுத்தப்படுகிறது. அங்கு மண் எடுப்பதில் சிரமம் உள்ளது. பூளவாடியில் இரண்டு குடும்பங்கள் மட்டுமே மண்பாண்ட தொழில் செய்து வருகிறோம். அரசின் சார்பில் அடையாள அட்டை இருந்தும் மண் எடுக்க முடியவில்லை. மண் எடுப்பதற்கான வழிமுறைகளை எளிதாக்க வேண்டும் என்பது மண்பாண்ட தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்த ஆண்டு அகல் விளக்கு விற்பனை அமோகமாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News