வினாயகர் சிலை விற்க முயற்சி: தாராபுரத்தில் போலி மந்திரவாதி கைது

தாராபுரத்தில், ஐம்பொன் எனச் சொல்லி, கல் விநாயகர் சிலையை விற்க முயன்ற மந்திரவாதியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-04-04 09:30 GMT

வினாயகர் சிலை 

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மகளை கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த மந்திரவாதி அப்பா சேட் என்பவருக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளார். அப்பாசேட் அவ்வப்போது தாராபுத்தில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்து சென்றார். கருப்பையா, தனது வீட்டில் அரை அடி உயரமுள்ள கல் விநாயகர் சிலை ஒன்றை, பூஜை அறையில் வைத்து பூஜை செய்து வந்ததை பார்த்துள்ளார்.

இந்த சிலையை பார்த்த அப்பாசேட், மாமனார் கருப்பையாவிடம், ''இந்த சிலையில் ரசாயனத்தை பூசி, பசும் பாலை ஊற்றினால் பால் பச்சை நிறமாக மாறும். அந்த பாலை பருகினால் உடலில் உள்ள அனைத்து வியாதிகளும் தீரும்'' என கூறினார்.

இதனை கேட்ட கருப்பையா அந்த சிலையை அப்பாசேட்டிடம் கொடுத்து,''அதன்மீது ரசாயனம் பூசி திரும்பக் கொண்டுவந்து கொடுக்குமாறு கூறினார். அதன்படி அந்த சிலையை வாங்கி சென்ற அப்பாசேட் அதன் மீது ரசாயனத்தை தடவி மாமனாரிடம் கொண்டு வந்து கொடுத்தார். இருவரும் அந்த சிலை மீது பசும்பாலை ஊற்றினர். அப்போது அந்த பால், பச்சை நிறமாக மாறியது.

இதையடுத்து அந்த சிலையை விற்றால் அதிகமாக சம்பாதிக்கலாம் என முடிவு செய்து அந்த சிலையை விற்பனை செய்ய முடிவு செய்தனர். அரவக்குறிச்சி பகுதியை சேர்ந்த ராஜா என்பவரை அழைத்து வந்து அந்த சிலையின் மகிமை குறித்தும், ஐம்பொன் சிலை என்றும் கூறியுள்ளனர். அவர்கள் கூறியதை நம்ப மறுத்த ராஜாவுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு, தாராபுரம் போலீசில் புகார் செய்தார்.

புகாரின் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் கருப்பையா வீட்டிற்கு சென்று சோதனை செய்தனர். போலீஸ் வருவதை அறிந்த கருப்பையா தப்பி ஓடிவிட்டார். மந்திரவாதி அப்பா சேட்டை, கைது செய்த போலீசார், அந்த சிலையை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள கருப்பையாவை தேடி வருகின்றனர். பறிமுதல் செய்த சிலையை ஆய்வுக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News