அரசு அதிகாரியாக நடித்து வசூல்வேட்டை நடத்தியவர் கைது

Update: 2021-01-03 05:15 GMT

தாராபுரத்தில் அரசு உயர் அதிகாரி எனக்கூறி வணிக நிறுவனங்களிடம் வசூல் வேட்டையில் ஈடுபட்ட மின்வாரிய ஊழியர் இரண்டாவது முறையாக பிடிபட்டார்.

தாராபுரம் பகுதியில் மின்வாரிய செயற்பொறியாளர் எனக்கூறி உடுமலை கோட்டம் மின்வாரியத்தில் பணியாற்றி வந்த பெதப்பம்பட்டியைச் சேர்ந்த உதவி அலுவலர் சரவணகுமார், தாராபுரம் நகர் மற்றும் கிராம பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள், பெட்ரோல் பங்க், செங்கல் சூலை, எலக்ட்ரிக் கடைகள், வணிக நிறுவனங்களில் மிரட்டி 300க்கும் மேற்பட்ட கடைகளில் பணம் வசூல் செய்து வந்துள்ளார்.

இந்நிலையில் தாராபுரத்தை அடுத்துள்ள டி.காளிபாளையத்தில் ஒரு வீட்டின் உரிமையாளரை 30,000 ரூபாய் பணம் கொடுக்குமாறு மிரட்டியுள்ளார். சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் பக்கத்தில் உள்ள நகரில் வசிக்கும் நண்பர்களிடம் இதுபற்றி கூறியுள்ளார். உடனே டி.காளிபாளையம், காந்திஜி நகர், எம்ஜிஆர் காலனி, அண்ணா நகர் பகுதியிலிருந்து வந்த ஊர் பொதுமக்கள் சரவணகுமாரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின்னாக பதிலளித்து பொதுமக்களை கெட்ட வார்த்தையில் திட்டி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஊர் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து அவரை தாராபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சரவணகுமார் ஏற்கனவே கடந்த டிசம்பர் 18ம் தேதி ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் உள்ள உணவகத்தில் அதன் உரிமையாளர் கமலக் கண்ணனை மிரட்டி பணம் பறிக்க முயன்ற போது அங்கிருந்த உணவக பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்ததில் போலியாக மின் வாரிய உயர் அதிகாரி எனக்கூறி மிரட்டி பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது.

Tags:    

Similar News