அசைந்தாடி வரும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேர்- பக்தர்கள் வழிபாடு

தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற பெருமை உடைய அவினாசியில், இன்று தேரோட்டம் விமர்சையாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-05-12 05:15 GMT

ரத வீதிகளில் அசைந்தாடி வரும் அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் திருத்தேர். 

திருப்பூர் மாவட்டம், அவினாசியில் உள்ள பெருங்கருணை நாயகி உடன்மர் அவினாசி லிங்கேசுவரர் கோவில், கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதாகவும், காசிக்கு நிகரான கோவில் என்ற சிறப்பும் பெற்றுள்ளது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தாக்கம் காரணமாக, இங்கு தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு நிலைமை சீரடைந்ததால், தேர்த்திருவிழா நடத்த முடிவானது. அதன்படி, கடந்த 5-ம் தேதி, கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர்த்திருவிழா தொடங்கியது.

அடுத்த நாள், 6- ம் தேதி சூரியசந்திர மண்டல காட்சிகளும், 7-ம் தேதி அதிகார நந்தி, கிளி, பூதம், அன்ன வாகன காட்சிகள், 8-ம் தேதி புஷ்ப பல்லக்கில் கைலாச வாகன காட்சி உள்ளிட்டவை நடைபெற்றன.அதை தொடர்ந்து, பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 - நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர், கற்பகவிருட்ச விழா, இரவு திருக்கல்யாண நிகழ்ச்சி, யானை வாகன காட்சிகள் நடைபெற்றன.

அவிநாசி சித்திரை தேர் திருவிழாவில் திருத்தேரில் சோமாஸ்கந்தர் பெருமான்

விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று காலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகளும், பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளினர். பின்னர், அமைச்சர் சாமிநாதன் உள்ளிட்டோர், திருத்தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நாளையும், நாளை மறுநாளும் திருத்தேர் வடம் பிடித்து நிலை சேர்க்கப்படும். வரும் 14-ம் தேதி காலை 8 மணிக்கு அம்மன் தேர் வடம்பிடித்து இழுத்துநிலை சேர்க்கப்படுகிறது.

திருத்தேர் விழாவை முன்னிட்டு அவினாசி நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது. திருப்பூர் மட்டுமின்றி, ஈரோடு, கோவை மாவட்டத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News