குன்றி பழங்குடி பள்ளிக்கு புத்துயிர் ஊட்டிய 'இணைந்த கைகள்' அமைப்பு

முடங்கிப் போயிருந்த குன்றி பழங்குடி பள்ளிக்கு, அவினாசி இணைந்த கைகள் அமைப்பினர், ஊதியம், பொருட்களை வழங்கி, புத்துயிர் தந்துள்ளனர்.

Update: 2021-11-22 08:00 GMT

குன்றி பழங்குடியினருக்கான பள்ளி திறப்பு விழாவில் பங்கேற்ற, சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம், அன்பு, காவல்துறை ஆய்வாளர் சந்திரன், திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், நண்பர்கள் குழு அறக்கட்டளையின் இராஜகோபால், ஊராட்சி தலைவர் மாதேஷ்  உள்ளிட்ட பலர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதி, கடம்பூர் அருகே, 26 மலைகிராமங்களை உள்ளடக்கிய குன்றி ஊராட்சி உள்ளது. இங்கு, மத்திய அரசின் செயல்பாட்டில், மாநில அரசின் வழிகாட்டுதலில், தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்புப் பள்ளி (NCLSS} செயல்பட்டு வருகிறது.

இப்பள்ளியில் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் யாருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை அறிந்து கொண்ட, அவிநாசி இணைந்த கைகள் அமைப்பினர், பள்ளிக்கு தேவையான அனைத்து பொருள்களை வாங்கித்தரவும், பள்ளியை செயல்பாட்டுக்கு கொண்டுவர உதவவும் முன்வந்தனர்.

அதன்படி, பள்ளி ஆசிரியர்களுக்கான ஊதியம் தலா 7000 வீதம் வழங்கப்பட்டதோடு, பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, ஓராண்டுக்கு மதிய உணவில் கூடுதலாக சத்தான உணவுப் பொருள்கள் வாங்கி தரவும், ஆசிரியர்களுக்கு தலா 2500 வீதம் ஓர் ஆண்டிற்கான ஊதியமும் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ள குன்றி பள்ளி முன்பாக, தொண்டு நிறுவனத்தினர்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக செயல்படாத இப்பழங்குடியினர் பள்ளிக்கு , இணைந்த கைகள் அமைப்பினர் புத்துயிர் ஊட்டி, நேற்று திறப்பு விழாவையும் நடத்தினர். மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள், ஊர் பொதுமக்கள் துணையோடு பள்ளி திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், ஸ்ரீபண்ணாரி அம்மன் தொழில் நுட்பக் கல்லூரி, களிமண் விரல்கள், நிலாப்பள்ளி, கோவை அரசுக் கல்லூரி முனைவர்கள் உள்ளிட்டோரும் கரம் கோர்த்தனர்.

இவ்விழாவில், சூழலியல் ஆய்வாளர் கோவை சதாசிவம், அன்பு, காவல்துறை ஆய்வாளர் சந்திரன், திட்ட இயக்குநர் சுப்பிரமணியம், ஊராட்சி தலைவர் மாதேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். விழாவில், பழங்குடி மக்களின் இசை இசைக்கப்பட்டு, பாரம்பரியம் நடனமாடி, இணைந்த கைகள் குழுவினருக்கும், விருந்தினர்களுக்கும் வரவேற்பு அளித்தனர்.

விழாவில் கலந்து கொண்ட மலைவாழ்  மக்கள். 

இணைந்த கைகளின் சார்பாக, 25 குடும்பத்தினர், சந்தீப், டாக்டர் குகப்ரியா, சிவா, இரவிக்குமார் , கெளரவ், சிராஜ், முத்து, வஞ்சிபாளையம் நண்பர்கள் குழு அறக்கட்டளையின் இராஜகோபால், அன்பால் அரவணைப்போம் அறக்கட்டளையின் ஆயிஷா உள்ளிட்டோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். பள்ளியின் ஒருங்கிணைப்பாளர், சதீஷ் நிகழ்வினை வழி நடத்திச் சென்றார்.

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் யாவும், பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல், அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்' என்றார் பாரதி. அவ்வகையில்,  மலைகிராமத்தில் முடங்கிப் போயிருந்த பள்ளிக்கு உதவிக்கரம் நீட்டி, மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வழிகாட்டிய இணைந்த கைகள் அமைப்பினர், தன்னார்வலர்களை, மலைவாழ் மக்களும், அதிகாரிகளும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் பாராட்டினர்.

Tags:    

Similar News