திருமுருகன் பூண்டி நகராட்சிக்கு ரூ. 3.5 கோடியில் புதிய கட்டிடம்

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு ரூ.3.5 கோடியில், ராக்கியாபாளையத்தில் புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

Update: 2022-09-09 05:37 GMT

திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு ரூ.3.5 கோடியில்,  புதிய கட்டிடம் கட்டும் பணியை அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைத்தார்.

திருப்பூர் மாவட்டத்தில் பேரூராட்சியாக இருந்த திருமுருகன்பூண்டி, கடந்த ஆண்டு டிசம்பர்,  நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தொடர்ந்து பேரூராட்சியாக செயல்பட்ட அதே கட்டிடத்தில் தற்போது வரை, நகராட்சி அலுவலகம் செயல்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்திற்கு தேவையான போதுமான இடவசதி அந்த கட்டிடத்தில் இல்லாததால், விரிவான இடவசதியுடன் புதிய கட்டிடம் கட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

மேலும் புதிய கட்டிடம் கட்ட 18-வது வார்டில் ராக்கியாபாளையம் ராசாத்தாகுட்டை அருகே இருந்த இடம், பரிந்துரை செய்யப்பட்டது. இதற்கு ஒருசில கவுன்சிலர்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவித்து, திருமுருகன்பூண்டி நகரின் மையப்பகுதியில் நகராட்சி அலுவலகம் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். ஆனால் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதே இடத்தில் நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டு, நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் ரூ.3.5 கோடியில் திருமுருகன்பூண்டி நகராட்சி அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் ரூ.40 லட்சத்தில் 14-வது வார்டுக்குட்பட்ட மகாலட்சுமி டவுன்சிப் பகுதியில் மண்சாலையை தார்சாலையாக அமைத்தல் உள்ளிட்ட பணிகளுக்கு பூமிபூஜை விழா  நடைபெற்றது.

விழாவுக்கு கலெக்டர் வினீத் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் குமார் முன்னிலை வகித்தார். இதில் தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்து கொண்டு, அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்து பேசினார். விழாவி்ல் அரசு துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Similar News