தற்காலிக துாய்மை பணியாளர்கள் முற்றுகை போராட்டம்

திருமுருகன்பூண்டி நகராட்சியில் தற்காலிக துாய்மை பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததை கண்டித்து கவுன்சிலர்கள்-ஊழியர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பணிக்கு செல்லாமல் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-09-11 05:24 GMT

சம்பளம் தராததால், தரையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக துாய்மை பணியாளர்கள்.

திருப்பூரை அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சியில் 150-க்கும் மேற்பட்ட தற்காலிக தூய்மை பணியாளர்கள் உள்ளனர்.  மாதந்தோறும் 5-ம்தேதி, அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மாதம் 10-ந்தேதி வரை சம்பளம் வழங்கப்படவில்லை. இதையடுத்து உடனடியாக சம்பளம் வழங்கக்கோரியும், சம்பளம் வழங்குவதை முறைப்படுத்தக் கோரியும் துாய்மை பணியாளர்கள், நேற்று காலை 6 மணிக்கு பணிக்கு செல்லாமல் நகராட்சி அலுவலத்தில் தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக நகராட்சி துணைத் தலைவரும், கவுன்சிலருமான ராஜேஸ்வரி தலைமையில் இந்திய கம்யூ., கட்சி கவுன்சிலர்களும், கவுன்சிலர் சுப்பிரமணியம் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சி கவுன்சிலர்களும் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

தகவலறிந்த நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன் மற்றும் திருமுருகன்பூண்டி போலீசார், அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாளை (திங்கட்கிழமை) பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் என்று நகராட்சி கமிஷனர் முகம்மது சம்சுதீன் உறுதியளித்ததை தொடர்ந்து, பணியாளர்கள் அனைவரும் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினார்கள்.

Similar News