அன்னூர் வட்டாரத்தில் 48 இடங்களில் உறிஞ்சி குழாய்

அன்னூர் வட்டாரத்தில், 48 இடங்களில், 63 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், கழிவுநீர் சுத்திகரிக்கும் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி வேகம் எடுத்துள்ளது.

Update: 2022-02-18 15:00 GMT

குழாய் அமைக்கும் பணி. 

அவிநாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, அன்னூர் வட்டாரத்தில், 21 ஊராட்சிகளில், 189 கிராமங்கள் உள்ளன. 150க்கும் மேற்பட்ட குளம், குட்டைகள் உள்ளன. சிறு தடுப்பணைகள், மழைநீர் செல்லும் பள்ளங்கள் உள்ளன. பெரும்பாலான குளம், குட்டைகள், தடுப்பணைகளில் பல வீடுகளில் இருந்து செல்லும் கழிவுநீர் தேங்குகிறது. இதனால் மழைக்காலத்தில், குளம், குட்டைகளில் வரும் மழைநீர் கழிவுநீரோடு சேர்ந்து மாசுபடுகிறது.

இதை தவிர்க்க, ஊரக வளர்ச்சித்துறை சார்பில், கழிவுநீர் மேலாண்மை திட்டத்தை துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் நீர்நிலைகளுக்கு முன்னதாக, 4 மீட்டர் நீளம், 3 மீட்டர் அகலம் ஒன்றரை மீட்டர் ஆழத்தில் கிடைமட்ட உறிஞ்சு குழிகள் அமைக்கப்படுகின்றன. இந்த உறிஞ்சு குழிகள் வழியாக செல்லும் கழிவு நீர் தூய்மைப்படுத்தப்படுகிறது. பிறகு இதன் வழியாக சென்று, தூய்மையான நீராக, நீர் நிலைகளில் சேருகிறது. இதனால் குளம், குட்டை, பள்ளங்களில் கழிவுநீர் தேங்காது.

அன்னூர் ஒன்றியத்தில், பிள்ளையப்பம்பாளையம், குன்னத்தூர், குப்பேபாளையம் ஆகிய மூன்று ஊராட்சிகளில், தலா ஒரு லட்சத்து 33 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 32 இடங்களில் கிடைமட்ட உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி வேகமாக நடந்து வருகிறது. செங்கப்பள்ளி, கணுவக்கரை, அல்லப்பாளையம், வடக்கலூர் ஆகிய நான்கு ஊராட்சிகளில் 16 இடங்களில் கிடைமட்ட உறிஞ்சி குழி அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இப்பணிகளை மாவட்ட உதவி திட்ட அலுவலர் சந்திரிகா ஆய்வு செய்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றிய மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் இதில் பங்கேற்றனர்.

Tags:    

Similar News