சொத்து வரி உயர்வு விவகாரம்: காங் - அ.தி.மு.க., கவுன்சிலர்கள் கை கோர்ப்பு

அவிநாசி பேரூராட்சியில் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டம் செய்தனர்.

Update: 2022-04-12 14:00 GMT

திருப்பூர் மாவட்டம, அவிநாசி பேரூராட்சி கூட்டம், அதன் தலைவர் தனலட்சுமி முன்னிலையில் நடந்தது. சொத்து வரி உயர்த்துவது தொடர்பான தீர்மானம் கொண்டு வரப்பட்டது. சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., பெண் கவுன்சிலர்கள், கறுப்பு புடவை, கறுப்பு முக கவசம் அணிந்து, கூட்டத்தில் பங்கேற்றனர். காங்., கவுன்சிலர்களும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்தனர்.

அ.தி.மு.க., கவுன்சிலர் சித்ரா பேசுகையில் ,''கடந்த, 2008ல், பேரூராட்சி நிர்வாகத்தால் சொத்து வரி உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் உயர்த்தக்கூடாது' என்றார். இதையடுத்து, அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்து, சிறிது நேரம் கழித்து மீண்டும் கூட்டத்தில் பங்கேற்றனர்.

காங்., கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில்,''ஏற்கனவே, சொத்து வரி அதிகம். சொத்து வரி உயர்வு தொடர்பாக மக்களுக்கு எவ்வித முன்னறிவிப்பும் தராமல் தீர்மானம் நிறைவேற்றுவது ஏற்புடையதல்ல; மக்களிடம் கருத்து கேட்ட பின், தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்,'' என்றார். இதே கருத்தை, அ.தி.மு.க., கவுன்சிலர்களும் முன்வைத்தனர்.

தி.மு.க., கவுன்சிலர் சிவப்பிரகாஷ் பேசுகையில்,'' சொத்து வரி உயர்வு தொடர்பாக மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுவதால் மட்டும், வரி உயர்த்தப்பட்டு விடாது. இந்த தீர்மானம் தொடர்பாக, பொதுமக்களிடம், வரும், 13ம் தேதி முதல், ஆட்சேபனை கோரப்பட உள்ளது. மக்கள் தங்கள் ஆட்சேபனையை பதிவு செய்யலாம். எனவே, தற்போது இந்த தீர்மானத்தை அங்கீகரிக்கலாம்,'' என்றார்.

இதையடுத்து, ஆறு அ.தி.மு.க., கவுன்சிலர்கள், இரு காங்., கவுன்சிலர்கள் தீர்மானத்துக்கு ஒப்புதல் அளிக்கவில்லை; தலைவர், துணை தலைவர் உட்பட எஞ்சிய, 8 கவுன்சிலர்கள் ஒப்புதல் வழங்கி, கையெழுத்திட்டனர். 'தங்களது எதிர்ப்பை தீர்மான புத்தகத்தில் பதிவு செய்தால் தான், மன்ற அறையை விட்டு வெளிநடப்பு செய்வோம்' எனக்கூறி, காங்., மற்றும் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களது கோரிக்கை ஏற்கப்பட்டதை தொடர்ந்து, போராட்டத்தை கைவிட்டனர்.

Tags:    

Similar News