திருமுருகன்பூண்டி காவல்நிலைய கட்டுமானப்பணிகள் தீவிரம்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி காவல் நிலையத்துக்கு சொந்த கட்டடம் கட்டும் பணி, முழுவீச்சில் நடந்து வருகிறது

Update: 2021-11-11 14:00 GMT

திருமுருகன்பூண்டி காவல் நிலைய கட்டட கட்டுமான பணி, ராக்கியாபாளையத்தில்  நடந்து வருகிறது. 

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டிக்கென தனி காவல் நிலையம் உருவாக்கப்பட்ட போதிலும், சொந்த கட்டடம் இல்லை. அங்குள்ள தனியார் கட்டடத்தில்,  காவல் நிலையம் செயல்படுகிறது. போதிய இடவசதி இல்லாததால், சிரமத்துக்கு இடையே காவலர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், ராக்கியாபாளையம் பகுதியில் உள்ள மாரியம்மன் மற்றும் பொங்காளியம்மன் கோவில் பின்புறமுள்ள வருவாய் துறைக்கு சொந்தமான இடத்தில், போலீஸ் ஸ்டேஷன் கட்ட இடம் தேர்வு செய்யப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டு பணிகள் துவங்கின. அந்த இடம், ஊர் பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் பயன்படுத்தி வந்த இடமாக இருந்தால், அங்கு காவல் நிலையம் கட்டக்கூடாது  என்றும், கட்ட வேண்டும் எனவும் வெவ்வேறு தரப்பு மக்கள் ஆட்சேபனை தெரிவித்து வந்தனர்.

இருப்பினும், சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் மற்றும் ஊர் மக்கள் அளவில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, அந்த இடம் தற்போது மக்கள் பயன்பாட்டில் இல்லை என அதிகாரிகளால் கூறப்பட்டு, சுமூக முடிவு எட்டப்பட்டது. தொடர்ந்து, காவல் நிலையம் கட்டும் பணி நடந்து வருகிறது. 'விரைவில் திறப்பு விழா நடத்தப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags:    

Similar News